
பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த 5ஆம் தேதி ராமதாஸை, அன்புமணி சந்தித்துப் பேசியிருந்தார். அதே சமயம் ராமதாஸ் - அன்புமணியின் இந்த சந்திப்பைத் தொடர்ந்து குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்திருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் பாமகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட வழக்கறிஞரான பாலுவை அவர் வகித்து வந்த சமூக நீதிப் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். மேலும் பாலுவிற்குப் பதிலாக வி.எஸ். கோபு என்ற வழக்கறிஞரை சமூக நீதிப் பேரவையின் புதிய தலைவராக நியமித்து ராமதாஸ் அறிவித்திருந்தார். ஏற்கனவே அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் தொடர்ந்து நீக்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு பாமக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சமூக நீதி பேரவை சார்பில் ஒரு சிறப்புச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று (11.06.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி சமூகநீதி பேரவையின் தலைவராக உள்ள பாலுவை நீக்குவதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது. இரண்டில் ஒரு பங்கு நிர்வாகிகள் கூடி முடிவு எடுத்தால் மட்டுமே அவரை பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற வரையறை இருக்கிறது. அதுதான் அறக்கட்டளையின் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே பாலுவே தொடர்ந்து அதன் தலைவராகச் செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேலும் இந்த அமைப்பின் புரவலராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.