
திருச்சி புனித வளனார் கல்லூரியில் தமிழாய்வுத்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் இன்று நடைபெற உள்ளது. மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதலமைச்சர் அகில இந்தியப் பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க.வை வரும் நாடாளுமன்றத் தேர்த்தலில் வீழ்த்த வியூகம் வகுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று பிறந்தநாள் விழா என்று மட்டும் இல்லாமல் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் பரப்புரையின் தொடக்கவுரையாகப் பேசி உள்ளார். விசிகவுடைய குரலுக்கு வலு சேர்க்கும் வகையில் முதலமைச்சருடைய பேச்சு இருந்துள்ளதை வரவேற்கிறோம்.
அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள அணிகளை இணைக்கும் பணியில் முதல்வர் ஈடுபட வேண்டும். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணமாகச் சென்று மாநில அரசியல் தலைவர்களைச் சந்திக்க வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்கரே, மமதா பானர்ஜி போன்ற தலைவர்களையும் சந்திக்க வேண்டும். அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரணி தான் அதிகம். ஆனால், அவற்றை ஒருங்கிணைப்பதில்தான் தேக்கம். அந்த தேக்கத்தை உடைப்பதற்கான ஒரு பிரகடனம் தான் முதல்வருடைய உரை.
அகில இந்திய அளவில் மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு தேவை என்று பலரும் கூறி உள்ளனர். திமுக அதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்பதற்கு உதாரணமாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். பா.ஜ.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திடீரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் இதற்கு முன்பாகவே வியூகம் வகுத்துவிட்டார். காங்கிரசுடன் இணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தான்” என்றார்.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து பேசியவர், “சாமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு கார்ப்பரேட்டுக்கானது என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அக்கறை இருக்கிறது. மக்களின் நலன் மீது இல்லை. மத்திய அரசு சமையல் கேஸ் விலை உயர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்” என்றார்.