Skip to main content

''ஒரு குவாட்டருக்கு 100 ரூபாய்; இதுதான் அந்த 30 ஆயிரம் கோடி ஆடியோ'' - எடப்பாடி பழனிசாமி

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

 ``Rs 100 per quarter; This is the 30 thousand crore audio'' - Edappadi Palaniswami interview

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் சென்னை வானகரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது பல பேரிடம் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வந்தது. இன்று புதிதாக எந்த வழக்கும் தொடரவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே இதுகுறித்து பல சம்மன்களை விளக்கம் கேட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

 

இது குறித்து உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் 60 நாட்களுக்குள் அமலாக்கத்துறை விசாரித்து நடவடிக்கை வேண்டும். அப்படி 60 நாட்களுக்குள் விசாரிக்கப்படவில்லை என்றால் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இன்றைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய வீடு, அலுவலகம் மற்றும் அவரைச் சார்ந்த நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

இது இப்பொழுது நடந்த வழக்கல்ல தொடர் நடவடிக்கையாக நடந்தது. டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் சுமார் 6,000 கடைகள் இருக்கிறது. அதில் 4,000 கடைகளுக்கு முறையாக டெண்டரே விடவில்லை. முறைகேடாக இரண்டு ஆண்டுகளாக பார்கள் செயல்பட்டு வருகிறது. அரசுக்கு வருகின்ற வருவாய் திமுகவை சேர்ந்தவர்களின் மூலமாக மேல் இடத்திற்கு போய்க்கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆளுநரிடத்திலும் புகார் அளித்தோம். முறைகேடாக பார் நடைபெற்றது மூலமாகவும், முறைகேடாக நடைபெற்ற பாரில் போலி மதுபானம் மற்றும் நேரடியாக ஆலையிலிருந்து காலால் வரி செலுத்தாமல் விற்கப்பட்ட மதுபானத்தில் ஒரு குவாட்டருக்கு நூறு ரூபாய் அதிலிருந்து கிடைத்ததாக தகவல் வந்திருக்கின்றது.

 

இப்படி பல்லாயிரக்கணக்கான கோடி இரண்டு ஆண்டில் கொள்ளையடித்திருக்கிறார்கள். மதுபானக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் உயர்த்தி விற்பனை செய்திருக்கிறார்கள். இப்படி பல கோடி ரூபாய் இன்றைக்கு முதலமைச்சருடைய குடும்பத்திற்கு சென்றதாக வெளிவட்டாரத்தில் வருகின்ற செய்திகள் எல்லாம் தெரிவிக்கின்றன. அது குறித்து தான் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 30,000 கோடி வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் என ஆடியோ மூலமாக தெளிவாக வந்தது. இப்படி முறைகேடாக சம்பாதித்த பணம் தான் 30,000 கோடி'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.