
வேலூரில் சுமார் 198 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை நாளை (ஜூன் 25ஆம் தேதி) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதனை முன்னிட்டு மருத்துவமனை பணிகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இணைந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “வேலூரில் பல் நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் அனைத்து கட்டிட பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை அடிப்படை வசதி இல்லாமல் திறக்கப்படுவதாக ஆதாரமில்லாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். எந்தவித புரிதல் இல்லாமல் அறிக்கை விடுவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாடிக்கையாக உள்ளது. ஏதாவது பத்திரிக்கையில் செய்தி வந்தால் அதை விசாரிக்காமல் அறிக்கை விடுவது அவருக்கு தொடர் வாடிக்கையாக உள்ளது. எந்த விமர்சனமாக இருந்தாலும் தீர விசாரிக்காமல் அறிக்கை விடுவது அருவருடைய பழக்கம். அவர் ஆதாரமில்லாமல் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி நேரடியாக வந்து பார்ப்பதற்கு எந்த தடையும் இல்லை. முதல்வர் திறப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ நேரில் வந்து பார்த்து தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு அறிக்கை விடுவது என்பது நல்லது. எடப்பாடி பழனிசாமி பொறாமையின் உச்சத்திற்கு சென்று அறிக்கைகளை விட்டுக் கொண்டுள்ளார். அதிமுக 10 ஆண்டுகளில் அவர்கள் பெற்ற விருதுகளைவிட திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் பெற்ற விருதுகள் அவர்களை விட 12 மடங்கு அதிகம். இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையில் கூறியுள்ளார். முதல்வர் நாளை துவக்கி வைக்கும் இந்த மருத்துவமனையில் அடுத்த நிமிடமே புறநோயாளர்கள் உள் நோயாளிகள் அனுமதிக்கப்படுபவர்கள்.
38 மருத்துவர்கள், 30 பயிற்சி மாணவர்கள், 21 பேர் செவிலியர்கள், 92 பேர் ஹவுஸ் கீப்பிங் சப்போர்ட் ஒர்க்கர்ஸ் என 218 பேர் நாளை இந்த மருத்துவமனையில் பணியாற்ற உள்ளனர். இதுவரை கடந்த நான்கு ஆண்டுகளில் 17 ஆயிரத்து 564 பணியிடங்களை உருவாக்கி இருக்கிறோம், இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் இது போன்ற அறிக்கையை எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறார். உலக அளவில் சென்னை சைதாப்பேட்டையில் 4.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 20 சிறப்பு துறைகளுடன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனைக்கான பணிகள் செப்டம்பர் மாதம் துவக்கப்படும். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன் இந்த மருத்துவமனை கட்டப்படும்.

தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டதின் காரணமாக மத்திய அரசின் மூலம் 1500 க்கும் மேற்பட்ட விருதுகள் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விட்டுள்ளார். போதை பொருள் நடவடிக்கை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு துறைகளின் சார்பில் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதின் காரணமாக மத்திய அரசு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு விருது வழங்கி உள்ளது.
தமிழகத்தில் 43,000 பள்ளிகளுக்கு அருகிலும் 2500 கல்லூரிகளுக்கு அருகிலும் 1300 கிராமங்களிலும் போதை வஸ்துக்கள்விற்பதற்கு தடைவிதித்து சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்று விருது வழங்கியுள்ளது. கடந்த நான்காண்டுகளில் மருத்துவத்துறையில் 17 ஆயிரத்து 566 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.காலியாக இருந்த 29,700 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.