Skip to main content

“வீடியோக்களை போலீசிடம் கொடுக்கப்போகிறேன்”; அண்ணாமலை மீது காயத்ரி பரபரப்பு குற்றச்சாட்டு 

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

Gayatri Raghuram quits BJP

 

பாஜக அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அணணமலை அறிவித்திருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

இந்நிலையில், காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “என்னுடைய கருத்தை சொல்ல, பிரச்னையை விசாரணை செய்ய, பெண்களுக்கு மரியாதை வழங்க கூட முடியாத பாஜகவில் இருந்து விலகுகிறேன். அண்ணாமலைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் கட்சியில் இருந்து கிண்டல் செய்யப்படுவதற்கு கட்சியில் இல்லாமல் கிண்டல் செய்யப்படுவது மேல். கட்சி தொண்டர்கள் பற்றி யாருமே இங்கு கவலைப்படவில்லை. அண்ணாமலையின் ஒரே குறிக்கோள் உண்மையான தொண்டர்களை வெளியே அனுப்புவதுதான். பாஜகவிற்கு வாழ்த்துக்கள். பிரதமர் மோடி ஸ்பெஷல் மனிதர். அவர் இந்த தேசத்தின் தந்தை. அவர் எப்போதும் என்னுடைய விஸ்வகுருவாக இருப்பார். தலை சிறந்த தலைவராக இருப்பார். அமித் ஷா எப்போதும் என்னுடைய சாணக்கிய குருவாக இருப்பார். நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.

 

கடந்த 8 வருடங்களாக என்னுடன் வேலை பார்த்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. அவர்கள் என்னுடன் அன்பாக இருந்தனர். எனக்கு மரியாதை கொடுத்தனர். அது ஒரு சிறந்த பயணம். மற்றவர்களை அவமானப்படுத்துவது இந்து தர்மம் கிடையாது. நான் அண்ணாமலை தலைமைக்கு கீழ் இயங்க முடியாது. இங்கே சமூக நீதி இல்லை. பெண்களே பாதுகாப்பாக இருங்கள். மற்றவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். யாரும் உங்களுக்காக வர மாட்டாரக்ள். நீங்கள் தனித்து இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது. உங்களை யாரும் மதிக்கவில்லை என்றால் அங்கே நீங்கள் இருக்க கூடாது. உங்களை நீங்கள் நம்புங்கள். வீடியோ, ஆடியோ அனைத்தையும் வெளியிடும்படி நான் போலீசில் புகார் அளிக்க உள்ளேன். அண்ணாமலைக்கு எதிராக விசாரணை நடத்த சொல்ல இருக்கிறேன். அவர் மோசமான நபர். எனக்கு எதிராக டிரெண்ட் செய்யும் வார் ரூம் பற்றியும் புகார் கொடுப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்