
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.1,194 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் மற்றும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு தஞ்சாவூர் அரசு சரபோஜி கல்லூரில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விவசாய பயிர் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தஞ்சையையும், கலைஞரையும் பிரித்து பார்க்க முடியாது. அவர், ஒருங்கிணைந்த தஞ்சையின் மண்ணின் மைந்தன். காவிரி மூலம் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டியது கலைஞரின் திமுக தான். அந்த வரிசையில், கலைஞரின் தலைமை தொண்டனாக நானும் டெல்டாகாரன் என்ற உணர்வோடு இங்கு வந்திருக்கிறேன். தஞ்சை ஒரத்தநாட்டில் மெகா நெல் கொள்முதல் நிலையம் அமைத்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மெகா டைடல் பூங்க திறக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சென்றடையில் வகையில் திட்டங்களை செய்கிறோம். சரஸ்வதி மஹால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கூடுதல் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தென்பெரம்பூர் பகுதியில் ரூ.42 கோடியில் பாலம் கட்டப்படும்.
மக்களான நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது நீங்கள் கொடுக்கும் வரவேற்பு மூலம் தெரிகிறது. இதையெல்லாம் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். தனது உள்கட்சி பிரச்சனையையும், கூட்டணி பிரச்சனையையும் மறைப்பதற்காக இன்றைக்கு அரசியல் அறிக்கை செய்து கொண்டிருக்கிறார். உண்மையான செய்திகளை படித்து அறிக்கை வெளியிடுகிறாரா? அதுவும் இல்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் நான் உங்களை சந்தித்துபோது பெட்டிகளில் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார். அரசு சார்பில் செய்தி வெளியிடுகிறோம். அந்த செய்தி, சோஷியல் மீடியா நாளிதழ்கள் என அனைத்திலும் வருகிறது. அப்போதும் செய்திகளை பார்க்க மாட்டேன், படிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து அரைவேக்காட்டுத்தனமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கைகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
அவருக்காக இல்லையென்றாலும், மக்களிடம் பதில் சொல்ல வேண்டியது எனது கடமை. ஏனென்றால், நான் பணியாற்றுவது உங்களுக்காக தான். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பில் பெறப்பட்ட 4, 57, 648 மனுக்களுக்கு தீர்வு காண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தனித்துறையை உருவாக்கி 100 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டேன். அதன்படி, 30,000 பேருக்கு பட்டா, 30,000 பேருக்கு ஓய்வூதியம், 10,000 பேருக்கு தொகுப்பு வீடுகள் அந்த மனுக்களை மையமாக வைத்து ரூ.544 கோடி மதிப்பில் 20,000 வளர்ச்சிப் பணிகளை திட்டமிட்டோம். இதனால் மக்கள் நம்பிக்கையோடு மனுக்களை கொடுக்க தொடங்கினார்கள். அந்த மனுக்களை முழுமையாக முறையாக பரிசீலிக்க முதல்வரின் முகவரி தினத்துறையை உருவாக்கி எல்லா மனுக்களுக்கும் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என உத்தரவிட்டேன். அடுத்து மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அவர்கள் பகுதிகளிலேயே சிறப்பு முகாம்களை நடத்தினோம். 2024இல் சென்னையில் இருக்கக்கூடிய கோட்டூபுரத்தில் முதலமைச்சரின் உதவி மையம் தொடங்கினோம். இதில், 200 பேர் வேலை பார்த்துக்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு மனு மீது நடவடிக்கை என்ன என்பதை அவர்கள் கண்காணித்து வருகிறார்கள். இது எல்லாவற்றையும் செய்திகள் மூலமாக ஆவணப்படுத்தி மக்களிடம் சேர்த்து வெளிப்படைத் தன்மையாக செயல்படுகிறோம்.
ஆனால், எதிர்கட்சித் தலைவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. அந்த பெட்டிகளுடைய சாவி தொலைந்துவிட்டதா என்று கேள்வி கேட்கிறார். அவர் நினைப்பு எல்லாம் பெட்டி மேல் இருக்கிறது. செய்தி தாள்களையே படிக்காமல் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் ஒன்று சொல்கிறேன். கடந்த 13ஆம் தேதி தினமலர் பத்திரிகையில் வந்த தலைப்பு என்ன தெரியுமா?. தினமலர் என்பது எந்த பத்திரிகை என்று உங்களுக்கு தெரியும். ‘முதல்வரிடம் மனு அளித்த 30 நிமிடத்திலேயே ஆக்ஷன்’ இது தான் தலைப்பாக வந்தது. இது தான் திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு. மக்களின் குறைகளைப் போக்க அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற முகாம் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுகிறேன். இப்படி நாளும் பொழுதும் அல்லும் பகலும் மக்களின் குறைகளை தீர்க்க உழைத்து கொண்டிருக்கும் நம்மை பார்த்தா எதிர்க்கட்சித் தலைவருக்கு எரியத்தானே செய்யும்.
இவர் ஒரு பக்கம் என்றால், ஒன்றிய அரசினுடைய கைப்பாவையாக செயல்படுகிற ஆளுநர் ஒரு பக்கம். தஞ்சை மாவட்டத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகம் அமைக்க அறிவிப்பு செய்தோம். அதன் பிறகு நானே தயங்கினாலும், அந்த பல்கலைக்கழகத்துக்கு கலைஞர் பெயர்தான் வைக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் திமுக கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் எல்லா கட்சியும் வேறுபாடு இல்லாமல் எல்லாரும் வற்புறுத்தினார்கள். அந்த பிறகு தான் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சட்ட வரைவை எல்லோருடைய ஒப்புதலோடு ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், தஞ்சை மாணவர்கள் உயர் கல்விக்கான அந்த சட்டத்திற்கு ஆளுநர் இந்த தேதி வரையில் ஒப்புதல் தரவில்லை. 40 நாள் ஆகிவிட்டது, இன்னும் அனுமதி தரவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது அவர் மாறியிருப்பா என்று நினைத்தோம். ஆனால், இன்னும் மாறவில்லை. ஒரு ஆளுநருக்கு இதைவிட வேறு என்ன முக்கியமான வேலை இருக்க முடியும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக இருக்கிறது. இப்படி ஆளுநர் ஒரு பக்கம் என்றால், நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசு ஒரு பக்கம். அதையெல்லாம் சமாளித்து நாம் எவ்வளவோ திட்டங்களையும், பல சாதனைகளையும் செய்து வருகிறோம்” எனப் பேசினார்.