
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.1,194 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் மற்றும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு தஞ்சாவூர் அரசு சரபோஜி கல்லூரில் 2.25 லட்சம் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விவசாய பயிர் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். தனது உள்கட்சி பிரச்சனையையும், கூட்டணி பிரச்சனையையும் மறைப்பதற்காக இன்றைக்கு அரசியல் அறிக்கை செய்து கொண்டிருக்கிறார். உண்மையான செய்திகளை படித்து அறிக்கை வெளியிடுகிறாரா? அதுவும் இல்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் நான் உங்களை சந்தித்துபோது பெட்டிகளில் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார். அரசு சார்பில் செய்தி வெளியிடுகிறோம். அந்த செய்தி, சோஷியல் மீடியா நாளிதழ்கள் என அனைத்திலும் வருகிறது. அப்போதும் செய்திகளை பார்க்க மாட்டேன், படிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து அரைவேக்காட்டுத்தனமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கைகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்” எனக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ‘திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது போல. அரைவேக்காட்டுத் தனமாக இருக்கிறதாம் அவருக்கு. அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா மு.க.ஸ்டாலின் அவர்களே? ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே, அது தான் அரைவேக்காட்டுத்தனம்!
தஞ்சைக்கு வந்த உங்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளை குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே, இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே? மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம் தந்த திருவாளர், டெல்டாவில் கால் வைக்கவே கூச்சப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை, இவர் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளை அசிங்கப் படுத்தவில்லை. நான் செய்தித் தாள்களைப் படிப்பது இல்லையாம். சொல்பவர் யார் தெரியுமா? முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத பொம்மை முதலமைச்சர். நாட்டில் மும்மாரி பொழிகிறது, எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள் என்று மாய உலகில் வாழும் உங்களை மீட்க வழியே இல்லை. நாள்தோறும் நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் செய்தித் தாள்களில் வருவது இல்லையா என்ன? இன்னும் சொல்லப் போனால், ஊடகம் மற்றும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானே என்னுடைய கருத்துகளை நான் தெரிவிக்கிறேன்?
எல்லா திட்டங்களிலும் கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இருக்கும் பெட்டி மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம். உட்கட்சி, கூட்டணிப் பூசல் சத்தம் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து கேட்பதாகத் தானே செய்திகள் வருகின்றன? நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று உங்கள் கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது உங்களுக்குத் தெரியாதா? ஆக, ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர் என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார் மு.க.ஸ்டாலின்’ எனப் பதிவிட்டுள்ளார்.