
இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதனையொட்டி அவர் இன்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தார். அதன்தொடர்ச்சியாக நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. வருமானவரி உச்ச வரம்பு மாற்றமின்றி தொடர்வது அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஏற்றம் அளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் 'மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.