Skip to main content

கர்நாடகாவை குறிவைக்கும் ஆம் ஆத்மி; நீதிமன்றத்திற்கு செல்ல மக்களுக்கு அறிவுரை

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

aam aadmi party karnataka assembly election manifesto released

 

கர்நாடக சட்டமன்றத்திற்கான ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளனர்.

 

இந்நிலையில், முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி கர்நாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறது. இதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ள ஆம் ஆத்மி கட்சி நேற்று கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான தங்களது வாக்குறுதிகளை வெளியிட்டது.

 

இதனை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் பெங்களூருவில், கட்சியின் 12 அம்ச தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டு பேசுகையில், "தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளை மிகச் சிறந்த முறையில் மேம்படுத்துவோம். தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்து  ஒழுங்குபடுத்த ஒரு குழுவை அமைப்போம். ஒப்பந்த ஆசிரியர்களின் பணியிடங்களை முறைப்படுத்துவோம். மாணவர்களுக்கு இலவசப் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன் ஆறு மாத கால வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்படும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் வயது 16 ஆகக் குறைக்கப்படும். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்தி  முன்னுரிமையின் அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று தெரிவித்தார்.

 

கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் பிருத்வி ரெட்டி கூறுகையில், "ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். பொது மக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இலவச சுகாதாரம் மற்றும் விவசாயிகளின் விளை பொருட்கள் மீது குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். சமூக நலன் காக்கப்படும். வீட்டிற்கே ரேஷன் பொருட்கள்  விநியோகம் செய்யப்படும். உள்ளூர் மக்களுக்கு 80% வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். பின்தங்கிய பகுதிகள் மேம்படுத்தப்படும் மற்றும் பெங்களூரில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அரசு வேலைக்கு கன்னட மொழி தெரிந்திருப்பது  கட்டாயமாக்கப்படும். விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும். சுவாமிநாதன் கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து வழங்கப்படும். விவசாயத்திற்கு 12 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்ற தவறினால், மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று எங்கள் மீது வழக்கு தொடரலாம்" என்று கூறினார்.

 

டெல்லியில் முதலில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், கர்நாடக தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்ததுடன், தேர்தலுக்கான வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளது. கர்நாடகா தேர்தலில் ஆம் ஆத்மியின் செயல்பாடுகளை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.