
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தின் போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் மீது அமெரிக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக வெளிநாட்டினர் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்கும் நடவடிக்கையை தீவிரமாக எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றச் சட்டத் திருத்தத்தில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர்களை அடையாளம் காணப்பட்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறிவர்களை அடையாளம் கண்டு தினமும் 3,000 பேரை கைது செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுமாறு அதிகாரிகளுக்கு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவின்படி, கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு முறையான ஆவணங்கள் இன்றி 44 ஊழியர்கள் தங்கியிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 44 பேருக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் (07-06-25) போராட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். அவர்கள் மீது தடியடியும் நடத்தியதால் போர்களமாக காணப்பட்டது.
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 44 பேருக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் நடத்திய அந்த போராட்டத்தில், பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டது. வாகனங்களுக்கு தீ வைத்து அதிகாரிகளையும் பொது மக்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து 3வது நாளாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா முன்னணி ஊடகத்தில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்த போராட்டம் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். அவரை கேமரா மேன் ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க போலீசார் ஒருவர், பெண் பத்திரிகையாளர் மீது ரப்பர் தோட்டாக்களை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்த ரப்பர் தோட்டாக்கள் பெண் பத்திரிகையாளர் காலில் பட்டது. இதனால், பெண் பத்திரிகையாளரும், கேமரா மேனும் அங்கிருந்து அலறி அடித்து ஓடுகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.