Skip to main content

கரோனா இரண்டாவது அலையை உடனடியாக நிறுத்தவேண்டும் - முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

pm modi

 

இந்தியாவில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று அதிகரித்து வரும் கரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்தும் மாநில முதல்வர்களோடு பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

 

மாநில முதல்வர்களோடு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, "இன்று இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 96%-க்கும் அதிகமானோர் குணமாகியுள்ளனர். இறப்பு விகிதம் மிகக் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நாடுகள் கரோனாவின் பல அலைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நம் நாட்டிலும், சில மாநிலங்களில் திடீரென கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதல்வர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்று உறுதியாகும் நபர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை தங்களை பாதுகாத்துக் கொண்ட மற்றும் பாதுகாப்பான மண்டலங்களாக இருந்த பல மாவட்டங்களில் கரோனா தொற்று பரவலின் அதிகரிப்பு காணப்படுகிறது. நாட்டின் 70 மாவட்டங்களில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் 150% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நாம் அதை இங்கே நிறுத்தவில்லை என்றால், நாடு முழுவதும் கரோனா அலை ஏற்படும். 

 

வளர்ந்து வரும் கரோனாவின் இரண்டாவது அலையை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும், இதற்காக, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முன்கூட்டியே செயல்படுவது நமக்கு இப்போது அவசியமாகிவிட்டது. தேவையான இடங்களில் சிறிய அளவிலான நோய்க் கட்டுப்பட்டு மண்டலங்களை உருவாக்குவதில் நாம் மென்மைத்தன்மையை கடைப்பிடிக்கக்கூடாது. சில பகுதிகளில் மட்டும் ஏன் கரோனா பரிசோதனை குறைவாக உள்ளது. இந்தப் பகுதிகளில் ஏன் தடுப்பூசி செலுத்தப்படுவது குறைவாக உள்ளது? என்பது நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். இது நல்லாட்சிக்கான சோதனை நேரம் என்று நான் நினைக்கிறேன். நம் நம்பிக்கை அதீத நம்பிக்கையாக மாறக்கூடாது. நமது வெற்றி அலட்சியமாக மாறக்கூடாது. 

 

நாம் பொதுமக்களை பீதியடையச் செய்யவேண்டியதில்லை. பயமுறுத்தும் சூழ்நிலையை நாம் கொண்டுவரவேண்டியதில்லை. சில முன் எச்சரிக்கைகள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் மக்களை சிரமங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். தெலுங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசத்தில் 10% க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் விரயமாகியுள்ளது. தடுப்பூசி வீணாவது எதனால் நடக்கிறது என்று மாநிலங்களில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். தடுப்பூசி வீணாகாமல் தடுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்" இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.