Skip to main content

பட்டியலிட்ட சோனியா காந்தி; பதில் தந்த மத்திய அமைச்சர்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

 The Union Minister replied to Listed by Sonia Gandhi

 

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்தப் போவதாகப் பல வருடங்களாகவே மத்திய பா.ஜ.க. அரசு சொல்லி வருகிறது. இந்நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

 

அதே நேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இம்மாதம் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத் தொடரில் 5 அமர்வுகள் நடைபெற உள்ளன. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்கள் என்ற வியூகங்கள் கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நம் நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதியிருந்த கடிதத்தில், ‘சிறப்புக் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் கட்சிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவது குறித்து எதிர்க்கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தப்படவில்லை எனவும், சிறப்புக் கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை, வேலைவாய்ப்பின்மை,  உள்ளிட்ட 9 அம்சங்கள் குறித்து 18 ஆம் தேதி கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புத் தொடரில் விவாதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

 

சோனியா காந்தி எழுதியிருந்த கடிதம் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற செயல்பாடுகளை அரசியலாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “நமது ஜனநாயக கோவிலான நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை அரசியலாக்கி, தேவையில்லாத சர்ச்சையை உருவாக்க முயற்சி செய்வது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு முழுமையான நடைமுறையைப் பின்பற்றியுள்ளது.

 

மேலும், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகுதான் குடியரசுத் தலைவரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்கு முன் அரசியல் கட்சிகளிடம் கலந்தாலோசிப்பது இல்லை. கூட்டத்தொடர் துவங்கிய பிறகு தான் அனைத்து கட்சிகளுடனான கூட்டம் நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்குமாறு சோனியா காந்தி குறிப்பிட்ட அனைத்து விவகாரங்களும் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு அரசால் பதிலளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, எதிர்க்கட்சியினர் வரவிருக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை ஆரோக்கியமான ஒன்றாகவும், ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தவும் வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்