Skip to main content

“போலீஸா... அவங்க எனக்கும் மேல...” - திருடன் கொடுத்த அட்வைஸால் உஷாரான உரிமையாளர்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

theif letter to sweet shop owner

 

பல இடங்களில் திருட வரும் நபர்கள் வீட்டில், கடைகளில் இருக்கும் பணத்தை திருடிவிட்டுச் செல்வதோடு, சாப்பாடு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் இருந்து சாப்பிட்டு சாவகாசமாக திருடிச் செல்லும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ராஜஸ்தானில் சற்று வித்தியாசமாக ஒரு கடையில் திருடிவிட்டு கடையின் உரிமையாளருக்கு பாசமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

 

ராஜஸ்தான் ஜெய்சல்மேர் மாவட்டத்தின் பானியான பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார் கோமாராம். கடந்த 23 ஆம் தேதி இரவு கடையைப் பூட்டி விட்டு அதே பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அடுத்தநாள் வழக்கம்போல் தனது கடையைத் திறந்த கோமாராம் கடையில், இனிப்புகள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடைகளில் திருடப்பட்டதை உணர்ந்த கோமாராம், உடனே கல்லாப்பெட்டிக்கு சென்று பார்த்தபோது, அதில் வைக்கப்பட்ட பணம் திருடப்பட்டிருந்தது. மேலும் அதில் இரண்டு பக்கத்திற்கு கடிதம் ஒன்று இருந்துள்ளது. 

 

அந்தக் கடிதத்தில், “ஹலோ சார், நான் நல்ல உள்ளம் உள்ளவன். நான் உங்கள் கடைக்குள் திருடுவதற்காக வரவில்லை. என் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நுழைந்தேன். உங்கள் கடையின் மேலிருந்து மூன்று செங்கற்களை அகற்றிவிட்டு உள்ளே நுழைந்தேன். நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. கடுமையான பசி. நான் உங்கள் கடைக்கு பணம் எடுக்க வரவில்லை. பசியை போக்க வந்தேன். நீங்கள் ஏழை என்று எனக்குத் தெரியும். அதனால்தான் உங்களுக்கு ஆறுதல் சொல்ல இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஆனால் திருடும்போது எனது காலில் காயம் ஏற்பட்டது எனவே இதற்கும் பணம் செலுத்த வேண்டும். உங்களின் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டேன். இரண்டு வெள்ளை இனிப்புகள் மற்றும் இரண்டு துண்டு அக்ரா பேத்தா தவிர வேறு எதுவும் உங்கள் கடையில் சாப்பிடவில்லை. நான் கடைசியாகச் சொல்ல விரும்புவது ஒன்று., காவல்துறையை அழைக்க வேண்டாம். அவர்களால் என்னை பிடிப்பதற்கு பதிலாக அவர்கள் உங்களிடமிருந்து பணம் பறிப்பார்கள். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து விசாரிக்க கடையின் உரிமையாளர் கோமாராம் திருடு குறித்து புகார் அளிக்க மறுத்துள்ளார். பாசக்கார திருடனின் செயலும், அதற்கு மதிப்பளித்த கடை உரிமையாளரின் செயலும் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.