
பட்டியலின மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் கல்லூரி முதல்வர் மீது சாதிய வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் வசித்து வந்த பட்டியலின மாணவர் ஒருவர், நவி மும்பை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். இதற்கிடையில், கடந்த சில மாதங்களாகவே கல்லூரி முதல்வர், மாணவரின் சாதியை சொல்லி அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர், மாணவரின் ஆண்மை குறித்து மற்றவர்கள் முன்னிலையில் இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவர், அவமானம் தாங்க முடியாமல் கடந்த 3ஆம் தேதி தனது விடுதி அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், கல்லூரி முதல்வர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.