Skip to main content

கீழடி ஆய்வறிக்கை; “இன்னும் வலுவான ஆதாரங்கள் தேவை” - மத்திய அமைச்சர்!

Published on 11/06/2025 | Edited on 11/06/2025

 

Union Minister says Stronger evidence needed for Keezhadi research report 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் 2 கட்டங்களாக அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இந்த அகழாய்வு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இருப்பினும் முதல் 2 கட்ட அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை தொல்லியல்துறை ஆய்வாளர் அமர்நாத் இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் மத்திய தொல்லியல் துறை இந்த அறிக்கையை இதுவரை பொதுவெளியில் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது. அதேபோன்று அகழாய்வின் போது கிடைத்த பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 4ஆம் கட்ட அகழாய்வை தொடங்கிய நிலையில் தற்போது 10ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தான் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்காதது ஏன்? என்று விளக்கமளித்திருந்தார். அதில், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டியிருக்கின்றன. அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம்.

ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை. அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடரவிரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்