Skip to main content

"புதுச்சேரி மக்கள் மே 03- ஆம் தேதி வரை அமைதி காக்க வேண்டும்"- முதல்வர் நாராயணசாமி பேட்டி! 

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

puducherry peoples cm narayanasamy coronavirus preventive discussion

 

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (28.04.2020) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள், மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி நேர்காணல் அளித்தார். அப்போது அவர், “மாநில அளவில் டெல்லிக்கு அடுத்தப்படியாக கரோனா பரிசோதனை செய்வதில் புதுச்சேரி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை புதுச்சேரியில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்துள்ளோம். பொதுமக்களில் 90 சதவீதம் பேர் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள். 85 சதவீதம் பேர் முகக்கவசம் அணிகின்றனர்.
 

 

puducherry peoples cm narayanasamy coronavirus preventive discussion


ஆந்திராவிற்குச் சென்று திரும்பிய 7 பேர் ஏனாம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். மத்திய அரசின் உத்தரவை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மத்திய உள்துறைக்கு எழுதிய கடிதத்தால் மாநில எல்லைக்குள் விடப்பட்டு தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளோம். காரைக்கால் பகுதியைச் சார்ந்த மாணவிகள் மத்திய பிரதேசத்தில் தங்கி உள்ளனர். வாரணாசிக்குச் சென்றவர்கள் திரும்பி வரமுடியாத நிலை உள்ளது. இதுபோன்று பலர் உள்ளனர். மே மாதம் 3- ஆம் தேதிக்குப் பிறகு வெளிமாநிலத்தில் தங்கி இருப்பவர்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்ற உத்தரவு படி தற்போது உள்ள குற்றவாளிகளைச் சிறைச்சாலைக்கு அனுப்பக் கூடாது என்பதற்காகத் தற்காலிகமாக அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம்.
 

puducherry peoples cm narayanasamy coronavirus preventive discussion

 

http://onelink.to/nknapp


காலை நேரத்தில் பொதுமக்கள் அதிகளவில் வெளியே வருகின்றனர். பொதுமக்கள் முடிந்தவரை வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட பல பகுதிகளின் இடையே தமிழக பகுதிகள் வருகின்றது. இந்தச் சிக்கலை நீக்க வெளியில் இருந்து வருபவர்களை முழுமையாக நிறுத்த வேண்டும். மக்கள் தங்களைத் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். புதுச்சேரி மக்கள் வரும் மே மாதம் 3- ஆம் தேதிவரை அமைதி காக்க வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்”.  இவ்வாறு புதுச்சேரி முதல்வர் பேசினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.