Skip to main content

மாணவர்களுக்குச் சிறப்புப் பேருந்து இயக்கக் கோரி காங்கிரஸ் போராட்டம்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

puducherry congress struggle free bus school students puducherry

 

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புப் பேருந்து இயக்கக் கோரி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் சாரம் அரசு தொடக்கப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார். மாணவர்களுக்கான இலவச ஒரு ரூபாய் பேருந்தை இயக்க வேண்டும். பள்ளி சீருடை, மதிய உணவில் முட்டை, இலவச நோட்டு புத்தகம், சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

இதனிடையே "பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து அடுத்த வாரம் முதல் இயக்கப்படும்" என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் பங்கேற்கும் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

 

puducherry congress struggle free bus school students puducherry
கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்

 

இதில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, மாணவர்கள் உருவாக்கியிருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார். அப்போது நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கான இலவச  பேருந்து அடுத்த வாரம் முதல் இயக்கப்படும். கல்வித் துறையில் இலவச மடிக்கணினி, இலவச சைக்கிள் உள்ளிட்டவை கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டு இருந்தது மீண்டும் அவற்றைத் தொடங்க ரூ.1160 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டு அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தப் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.