
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று (11/07/2021) ராஜ்நிவாஸில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்தார். அப்போது அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு குறித்த பட்டியலை வழங்கினார். பின்னர், கரோனா தடுப்பு நடவடிக்கைள், தடுப்பூசிப் போடும் பணிகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன. அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மற்றும் ஐந்து அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், "புதுச்சேரியில் 9- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 16- ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளும் ஜூலை 16- ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறது" என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அரசு உயரதிகாரிகள் கூறுகின்றன.