Skip to main content

விளையாட்டாய் செய்த காரியத்தால் நடந்த விபரீதம்! கர்ப்பிணி பெண் பரிதாப பலி!

Published on 10/02/2022 | Edited on 10/02/2022

 

Pregnant woman passes away police investigation

 

கேரளா மாநிலம், கோட்டயம் ஆசாரி பரம்பைச் சேர்ந்த ஷண்முகம் என்பவரின் மகள் ஸ்ரீலஷ்மி (23) என்பவருக்கும், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அவினாஷ் (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் துபாய்க்கு வேலைக்கு சென்ற அவினாஷ், கடந்த 3 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். இந்நிலையில், அவரது மனைவி கருவுற்றார். 

 

மனைவி ஒரு மாதம் கர்ப்பிணியாக இருப்பதால் அவினாஷ் துபாய்க்கு செல்வதை விட்டுட்டு மனைவிக்கு உதவியாக இருக்க முடிவு செய்தார். இதற்கு மனைவி ஸ்ரீலஷ்மி எனக்கு உதவி வேண்டாம். நீங்க துபாய்க்கு செல்லுங்கள் எனக்கு உதவியாக அம்மாவை அழைத்துக் கொள்கிறேன் என்றிருக்கிறார். இதற்கு அவினாஷ், எனக்கு கம்பெனி லீவை நீட்டித்து தந்து விட்டார்கள். அதனால் நான் இன்னும் 3 மாதம் கழித்து தான் துபாய்க்கு செல்லுவேன் என கூறியிருக்கிறார்.

 

இந்த நிலையில் முதல் திருமண நாளை கடந்த 8-ம் தேதி நெருங்கிய உறவினர்களை அழைத்து வீட்டில் வைத்து கொண்டாடி உள்ளனர். அடுத்த நாள் 9-ம் தேதி காலையில் அவினாஷுக்கும் அவரது மனைவிக்கு துபாய் செல்வதற்கு தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீலஷ்மி கணவனை பயம் காட்டுவதற்காக விஷத்தை வாயில் விட்டு அதை விழுங்காமல் கணவனை பயம் காட்டியுள்ளார். இதை பார்த்த கணவன், தான் துபாய்க்கு போவதாகவும், விஷயத்தை துப்பவும் கூறியிருக்கிறார்.

 

அப்போது வாயில் விஷத்தை வைத்து கொண்டிருந்த அவரது மனைவி, “தலையில் சத்தியம் செய்” என பேச முயன்றபோது எதிர்பாராத விதமாக விஷம் வாய்க்குள் சென்று விட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரீலஷ்மி அதிர்ச்சியடைந்து காப்பாற்றுங்கள் என அலறி சத்தம் போட்டார். உடனே கணவர் அவினாஷ், மனைவியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஸ்ரீலஷ்மி போலீசில் வாக்குமூலம் கொடுத்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்து ஒரு ஆண்டே ஆனதால், இவ்வழக்கை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்