Skip to main content

பிணவறைக்குள் ஒரு புத்தக காதலன்! அமைச்சரை வியக்கவைத்த மருத்துவ ஊழியர்

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

The morgue turned into a library! Congratulations to the Minister of Health!

 

இன்றைய இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் புத்தகம் வாசிக்கக் கூடிய பழக்கம் என்பது முற்றிலும் குறைந்துள்ளது. முழுமையான எழுத்தறிவு கொண்ட கேரளாவில் கூட புத்தகங்களை விட்டுட்டு செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். இந்த நிலையில், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை அறையை நூலகமாக மாற்றியுள்ளார் அதன் ஊழியரான ஜெயக்குமார்.

 

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்குள்ள பிரேதப் பரிசோதனை அறையில் ஃபாரின்ஸிக் மருத்துவ அறிவியல் ஜுனியர் லேப் அலுவலராக, மணிகண்டேஸ்வரம் போற்றி கோணத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (53) பணிபுரிந்து வருகிறார். 4 அறைகளை கொண்ட அங்கு ஒரு அறையில் சுமார் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஜெயக்குமார் வாங்கி வைத்துள்ளார். 

 

விபத்தில் பலியானவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களின் பிணங்களை வைத்திருக்கும் இங்கு ஒரு மினி நூலகத்தை ஜெயக்குமார் உருவாக்கி வைத்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

The morgue turned into a library! Congratulations to the Minister of Health!

 

இது குறித்து நம்மிடம் பேசிய ஜெயக்குமார், “11ம் வகுப்பு படிக்கும் போதே புத்தகம் வாசிக்கும் எண்ணம் என்னை தூண்டியது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து வருகிறேன். ஒரு நிமிடம் கிடைத்தால் கூட அந்த நேரத்தை வீணடிக்காமல் 10 வரிகளாவது படித்து விடுவேன். இதனால் எப்போதும் என்னுடன் புத்தகம் இருந்து கொண்டே இருக்கும்.

 

அந்த பழக்கத்தில் தான், நான் வேலை செய்கிற பிணவறையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகம் வாசிப்பதற்கு வசதியாக ஒன்றிரண்டு என வாங்கி தற்போது அது 100க்கும் மேற்பட்ட புத்தகங்களாக உள்ளன. நான் வாசிப்பதை பார்த்து, பல மருத்துவா்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டு அவர்களும் நேரம் கிடைக்கும் போது வந்து வாசிக்கிறார்கள். மேலும் என்னுடைய வீட்டில் 3500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.

 

இதற்கு முன் கோழிக்கோடு, கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்த்த போது அங்கேயும் புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத எனக்கு புத்தகம் தான் மனைவி பிள்ளைகள் என நேசிக்கிறேன். என்னுடைய இறுதி மூச்சு விடும் வரை புத்தகங்களை வாசித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 1945-ல் வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் உள்ளூர் பரமேஸ்வரன் ஐயர் எழுதிய புத்தகம் முதல், தற்போதைய கேரளா அரசு செயலாளர் சிவசங்கர் (தங்கம் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கூட்டாளியாக இருந்தவர் என குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்) எழுதிய ‘அசுத்தா மாவு வெறும் ஒரு ஆண’ என்ற புத்தகம் வரை வாசித்து விட்டேன்.

 

இங்கு நான் புத்தகம் வைத்திருப்பதை அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி அங்கு வரும் போது நேரிடையாக வந்து பார்க்கிறேன் என்றார். இளைய தலைமுறையினரும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதை விட்டுட்டு, புத்தகம் வாசிப்பதில் கொஞ்சம் அக்கரையை செலுத்த வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.