பசு திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிடுவேன் என்று கர்நாடகா அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தர கன்னட மாவட்டத்தில் பசு திருட்டு சம்பங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஹொன்னாவர் அருகே கர்ப்பிணி பசுவின் தலையை துண்டித்து மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மீன்வளம் மற்றும் துறைமுகங்கள் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சரும், உத்தர கன்னட மாவட்ட அமைச்சருமான மங்களா சுப்ப வைத்யா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நாம் தினமும் பசுவின் பால் குடிக்கிறோம். அது நம்மை பாசத்துடனும் அன்புடனும் பார்க்கும் ஒரு விலங்கு. பசு திருட்டு சம்பங்களை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்றும் அது யாராக இருந்தாலும் சரி. அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்றும் நான் போலீசாரிடம் சொன்னேன். தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை சாலையில் வைத்து சுட்டுக் கொல்லுங்கள்" என்று நான் போலீசாரிடம் கூறியுள்ளேன்.
முந்தைய பாஜக ஆட்சியின் போது பசுக்கள் திருடப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டாலும், பசு வளர்ப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ், பசுக்கள் மற்றும் அவற்றின் பராமரிப்பாளர்கள் இருவரும் பாதுகாக்கப்படுவார்கள்” என்று கூறினார்.