Skip to main content

இந்தியாவின் முதல் கரோனா தடுப்பு மருந்து சோதனை... எதிர்மறை விளைவுகள் ஏற்படவில்லை எனத் தகவல்...

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

haryana minister about covaxine human trials result

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தான 'கோவாக்ஸின்' மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டபோது எவ்விதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தியாவில் 10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஹைதராபாத்தில் இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர். மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்து கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இந்த மருந்து வேலைசெய்யும் விதம் குறித்து விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றிபெற்ற சூழலில், இதனைக்கொண்டு மனிதர்களுக்குச் சிகிச்சையளிக்கும் சோதனையை நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பும் அண்மையில் அனுமதி அளித்தது.

 

இதனைத்தொடர்ந்து இந்த மருந்து மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. சண்டிகரின் ரோடக் நகரில் உள்ள உயர்நிலை மருத்து அறிவியல் கல்வி நிறுவனத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வரும் சூழலில், மூன்று தன்னார்வலர்களுக்கு இந்த மருந்து உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் யாருக்கும் எந்தவிதமான எதிர்மறையான விளைவுகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், “பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் கண்டுபிடித்த கரோனாவுக்கான 'கோவாக்ஸின்' தடுப்பு மருந்து மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் பணி ரோடக் நகரில் உள்ள பி.ஜி.ஐ. நிறுவனத்தில் நடந்து வருகிறது.

 

மூன்று தன்னார்வலர்களுக்கு முதல்கட்டமாக மருந்து உடலில் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டதில், அவர்களுக்கு எந்த எதிர்மறையான விளைவுகளும் வரவில்லை. அனைவரும் தடுப்பு மருந்தைத் தாங்குகின்றனர். அடுத்து வரும் நாட்களில் தன்னார்வலர்கள் அதிகமாகச் சேர்க்கப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கோவி ஷீல்டை அடுத்து கோவாக்சின்; தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
Covaccine after Covid Shield; Description given by the manufacturer


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இதில், இந்த நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து அதை மக்களும் தவறாமல் போட்டு வந்தனர். கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. அதே போல், மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டிராஜெனேகா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டுபிடித்தது.

இதில், கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிஷீல்டை, மத்திய அரசு அனுமதியுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 70 சதவீதம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு வகையான தடுப்பூசிகளை, உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தினர். இதனால், இந்த நோய்த் தொற்று பரவலாக குறைந்து வந்து மக்களை பெருமூச்சடைய செய்தது.

தடுப்பூசிகளைப் பயன்படுத்தி நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி வந்த அதே வேளையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் மரணங்களும், உடல்நல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தது. இந்தப் புகார்களை அடுத்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில், கோவிஷீல்டு கண்டுபிடிப்பு நிறுவனமான ஆல்டிராஜெனேகாவுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆல்டிராஜெனேகா நிறுவனத்தோடு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் சேர்ந்து அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ‘கோவிட் தடுப்பூசியான கோவிஷீல்டு சில நேரங்களில் ஏதேனும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை தரலாம். ஏதேனும் ஒரு சிலருக்கு இது போன்ற பாதிப்பு வருவது அரிதான விஷயம்தான். ரத்தத்தில் உறைதல் ஏற்படலாம், டிடிஎஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome ) பாதிப்பு வரலாம். இது எல்லோருக்கும் வருவதில்லை, மிக அரிதாக நடக்கலாம்’ எனத் தெரிவித்தது. இது தற்போது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பரிசோதிக்கவும், அதன் பக்க விளைவுகள் மற்றும் அபாய காரணிகளை ஆய்வு செய்யவும் மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க அறிவுறுத்தல்களை வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Covaccine after Covid Shield; Description given by the manufacturer

இந்நிலையில் மற்றொரு கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா என்ற கேள்வி மற்றும் சந்தேகங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது. மக்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் என்பதை மனதில் வைத்து கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசி பாதுகாப்பு குறித்து மதிப்பீடும் செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியின் தன்மை தொடர்ந்து கண்காணிக்கப்படும். கோவாக்சின் லைசன்ஸ் நடைமுறையின் போது சுமார் 27 ஆயிரம் வகைகளில் ஆய்வு செய்யப்பட்டது என அதனைத் தயாரித்த பாரத் பயோ டெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த வித பக்க விளைவுகளும் கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது என்பது உறுதி எனவும் பாரத் பயோ டெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.