![Fake wine bottles with bran bags! Pondicherry police shocked!](http://image.nakkheeran.in/cdn/farfuture/qgDnj49FAbHxkVchTWn23uh6FIzbzBe1HV9A7H34ydA/1669959143/sites/default/files/inline-images/th-1_3560.jpg)
தமிழக மதுபான வகைகளை புதுச்சேரியில் போலியாக தயாரித்து தமிழகத்திற்குக் கடத்தி வருவதாக புதுச்சேரி கலால் துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில், தாசில்தார் சிலம்பரசன் மற்றும் கலால்துறை ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஒருங்கிணைப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் சேதராப்பட்டு கரசூர் பிடாரி அம்மன் கோவில் அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததை அறிந்த கலால்துறையினர் அதனை சோதனை செய்ததில் தவிடு மூட்டைக்கு மத்தியில் 153 பெட்டிகளில் போலியாக தயாரிக்கப்பட்ட, ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 7344 தமிழக மதுபான வகை மது பாட்டில்கள் இருந்தது.
![Fake wine bottles with bran bags! Pondicherry police shocked!](http://image.nakkheeran.in/cdn/farfuture/xI6VLyJMWn2_i_G56AzVRWEvUtuy4UFz-jrNlCoCjdk/1669959159/sites/default/files/inline-images/th-2_1186.jpg)
இந்த மது பாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. அதையடுத்து மதுபான பெட்டிகளையும், லாரியையும் பறிமுதல் செய்த கலால் காவல்துறையினர் மதுபான பாட்டில்களை கடத்த முயன்ற வண்டி உரிமையாளர் மற்றும் அதில் தொடர்புடையவர்களை கைது செய்து, தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.