Skip to main content

“மோடியின் கருத்துக்கு செவி சாய்த்து முதன்மை மந்திரி இதில் தீவிரமாக செயல்பட வேண்டும்” - திமுக எம்.எல்.ஏ சிவா வேண்டுகோள்!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

DMK MLA Siva urges minister to listen to Modi voice and take action seriously

 

பிரதமரின் அறிவுறுத்தல்படி செயல்பட ஏதுவாக காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தை முழு செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என புதுச்சேரி (தெற்கு) மாநில அமைப்பாளரும், திமுக எம்.எல்.ஏவுமான சிவா, பாஜக அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். காதி மற்றும் கிராம தொழில்களின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் திட்டமிடுவது, அத்தொழில்களைத் தொடங்க ஊக்குவிப்பது, காதி மற்றும் கிராம தொழில்களை அமைப்பதன் மூலம் தகுதியானவர்களுக்கு வேலை வழங்குவது, அத்தொழில்களின் வளர்ச்சிக்கு கடன்களை வழங்குவது, அத்தகைய தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் கருவிகளை வழங்குவது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் கண்காட்சிகளாக வைப்பது, விற்பனை செய்து தருவது, அதற்காக அரசிடம் மானியம் பெற்று அப்பொருட்களுக்குத் தள்ளுபடி வழங்குவது ஆகிய பணிகளை செய்வதற்காக பாண்டிச்சேரி காதி மற்றும் கிராம தொழில் வாரியம் உருவாக்கப்பட்டது. 

 

ஆனால், இந்த வாரியத்தின் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக முடங்கியுள்ளது. சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. தற்போது 7 மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட தள்ளுபடி தொகை ரூ. 4.5 கோடி, பல ஆண்டுகளாக வாரியத்திற்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்தத் தொகைதான் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி உள்ளிட்டவற்றை வாரியம் வழங்க உதவியாக இருக்கும். அரசு வழங்காததால் இதையும் வாரியம் செய்ய முடியவில்லை. புதுச்சேரி கதர் வாரிய தொழிலாளர்களுக்கு இ.பி.எஃப், இ.எஸ்.ஐ, இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தவில்லை. கடந்த ஓராண்டு மட்டுமே 9 பேர் இறந்துள்ளனர். இன்சூரன்ஸ் பிரிமியம் தடையின்றி செலுத்தப்பட்டிருந்தால் அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ. 7 லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கிடைத்திருக்கும். அதுவும் கிடைக்காமல் அக்குடும்பம் நிர்க்கதியாக உள்ளது. எதிர்காலத்தில் இந்நிலை தொடராமல் இருக்க உடனடியாக அரசு இன்சூரன்ஸ் பிரிமியம், இ.எஸ்.ஐ, பி.எஃப் உள்ளிட்ட நிலுவை தொகைகளையும் வழங்க வேண்டும்.

 

இந்த வாரியம் சிறப்பாக செயல்பட தொடங்கினால் இளைஞர்கள் கதர் தொழிலில் வேலைவாய்ப்பு பெறுவர். அவர்களது கதர் பொருட்கள், சுற்றுலா பயணிகள் வருகைக்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். எனவே புதுச்சேரி காதி மற்றும் கிராம தெழில் வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து, அரசு தர வேண்டிய நிதிகளை முழுமையாக கொடுத்து, சிறப்பாக செயல்படச் செய்ய வேண்டும்.  பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களிடம் பேசும்போது காதி பொருட்களை வாங்குவது தேசத்துக்கு ஆற்றும் சேவை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், புதுச்சேரியில் கதர் பொருட்களை உற்பத்தி செய்வதே, வாரிய செயல்பாட்டின் முடக்கத்தால் முடங்கிப்போய் உள்ளது. எனவே பிரதமரின் கருத்துக்கு செவி சாய்த்து, புதுச்சேரியில் ஆளும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசில் பாஜகவின் முதன்மை மந்திரியாக இருப்பவர் இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு, சம்பளமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி, ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் நோக்கில் புதுச்சேரி காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தை முழு செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் பிரதமரின் கூற்றுப்படி மக்களுக்கு கதர் பொருட்களைக் கிடைக்கச் செய்ய முடியும் என்பதால், இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.