Skip to main content

ட்ரங்க் பெட்டியில் குழந்தைகளின் சடலம்; பெற்றோரை விசாரித்ததில் திடுக்!

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

'Couldn't feed children'; Parents arrested for  three girls by locking them in a trunk

 

வீட்டில் இருந்த ட்ரங்க் பெட்டிக்குள் மூன்று சிறுமிகள் இறந்த நிலையில் கிடந்த சம்பவத்தில் பெற்றோர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பஞ்சாப்பில் நிகழ்ந்துள்ளது.

 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கான்பூர் எனும் கிராமத்தில் வசித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளி சுஷில் மண்டலின் மகள்கள் அமிர்தா குமாரி (9), சாக்ஷி (7) மற்றும் காஞ்சன் (4).  இவர்கள் மூன்று பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போய்விட்டனர்.

 

குழந்தைகள் காணாமல் போனது குறித்து நேற்று மாலை வரை சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. காணாமல் போன குழந்தைகளைப் பற்றி சுஷில் மண்டல் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் சுரீந்தர் சிங் என்பவர் காவல்துறை ஹெல்ப் லைன் எண்ணான 112க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மக்சூதன் காவல் நிலைய போலீசார் இரவு 11 மணியளவில் தேடுதலை தொடங்கினர்.

 

'Couldn't feed children'; Parents arrested for  three girls by locking them in a trunk

 

ஆனால் குழந்தைகள் காணாமல் போனது குறித்து பெற்றோர் எந்த பதற்றமும் அடையவில்லை. குழந்தைகளின் தந்தை மது போதையில் இருந்துள்ளார். இதனால் போலீசாரின் சந்தேகம் சிறுமிகளின் பெற்றோர் மீது திரும்பியது. பின்னர் வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலில் வீட்டில் இருந்த பெரிய ட்ரங்க் பெட்டி ஒன்றில் மூன்று சிறுமிகளும் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

 

பெற்றோர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைகளுக்கு சரியாக உணவளிக்க முடியாததால், வறுமை காரணமாக தங்கள் மகள்களை கொன்றதாக சிறுமிகளின் தாயே பின்னர் ஒப்புக்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலை மகள்களுக்கு கொடுத்த பாலில் பயிர்களுக்கு தெளிக்கப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை சேர்த்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். மீட்கப்பட்ட சிறுமிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை அறிக்கை கைக்கு வந்தால் உறுதியான தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.