Skip to main content

4 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்; ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்!

Published on 19/06/2025 | Edited on 19/06/2025

 

voting underway Assembly By-elections in 4 states today

4 மாநிலங்களில் உள்ள 5 காலியான சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று (19-06-25) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியான தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானது. அதே போல், மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் பகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நஸிருதீன் அகமது உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தின் காடி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ கர்சான்பாய் சோலங்கி உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானது. குஜ்ராத் மாநிலத்தில் உள்ள மற்றொரு தொகுதியான விஸாவதர்  தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பயானி பூபேந்திரபாய், தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.கவில் இணைந்தார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. கேரளா மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி ஆதரவுடன் வெற்றி பெற்ற பி.வி.அன்வர், தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்தார். இதனால், அந்த தொகுதி காலியானது. 

இந்த 4 மாநிலங்களில் உள்ள 5 காலியான சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, அந்தந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன் தினம் (17-06-25) மாலையுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று (19-06-25) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 5 தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலரும், வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதில் பதிவாகும் வாக்குகள், வருகிற ஜூன் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்