Skip to main content

ஆதீனத்துக்கு தனி விமானம் ஏற்பாடு செய்த மத்திய அரசு

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

central vista opening ceremony thiruvavaduthurai adheenam reached delhi special flight

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும்  இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில் பிரதமர் மோடியே நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைப்பார்.   வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கச் செங்கோலை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் மோடி நிறுவுவார். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதைக் குறிக்கும் வகையில் இந்த செங்கோல் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

 

திருவாவடுதுறை ஆதீனம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு ராஜாஜி, நேருஜி ஆகியோர் திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்புகொண்டு செங்கோல் ஒன்றை கொடுக்கும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அந்த வேண்டுதலை ஏற்று திருவாவடுதுறை ஆதீனம் மூலம் 1947 ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு தங்கச் செங்கோல் செய்து கொடுக்கப்பட்டது. இந்த செங்கோல் நீதி நெறி தவறாமல் நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்போது 20வது குருமாசன்னிதானம் அம்பலவாணன் ஆட்சிக் காலத்தில் கொதுமா மூர்த்திகள், நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் ஆகியோர் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தங்கச் செங்கோலை நேருவிற்கு கொடுத்தனர்.

 

இந்த செங்கோலானது 28 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது. அருங்காட்சியகத்தில் சுமார் 75 ஆண்டுக்காலமாக உறங்கிக் கொண்டு இருந்த செங்கோலை பாராளுமன்றத்தில் வைப்பதற்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். பழைய நடைமுறைகளைப் பின்பற்றி செங்கோல் வைக்கப்படுமா என்பதை பற்றி எதுவும் தெரியவில்லை. நாளைக்கு நடைபெறுவதை இன்றைக்கு சொல்ல முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அதன் பின்பு தான் 1947 இல் சுதந்திரம் அடைந்தோம். அதன் நினைவாகத் தான் செங்கோல் வழங்கப்பட்டது. செங்கோலை தர்ம தேவதையாக வழிபட்டு ஆட்சி நடத்தப்பட வேண்டும். நேர்மையாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்கு தான் இந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

 

central vista opening ceremony thiruvavaduthurai adheenam reached delhi special flight

 

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள திருவாடுவதுறை ஆதீனம் இன்று டெல்லி சென்றடைந்தார். தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் சென்று அங்கிருந்து கார் மூலமாக பாராளுமன்றத்தை அடைந்தார். அப்போது திருவாடுவதுறை ஆதீனம் சார்பாக அங்கு தயாராக இருந்தவர்கள் திருவாடுவதுறை ஆதீனத்தை வரவேற்றனர். விமானம் மூலம் டெல்லி செல்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து இருந்தது. இதே போன்று தருமபுரம் ஆதீனமும் டெல்லி சென்றடைந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.