Skip to main content

எளிமை பின்னணி... எடப்பாடியின் நம்பிக்கையைப் பெற்ற தமிழ்வேந்தன்!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
 Puducherry candidate Tamilvendan who won Edappadi palanisami  trust

நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. இந்த முறை புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும், இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. இதில், அதிமுக மூன்றாவது அணியாக களம் இறங்குகிறது. இந்த முறை அதிமுக சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமை புதுச்சேரி மக்களவை திருபுவனை தொகுதி வேட்பாளராக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தனை அறிவித்தது. 

அதிமுக தலைமை இளம் வேட்பாளருக்கு வாய்ப்பு அளித்தது புதுச்சேரியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வேட்பாளர் அறிமுகம் புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் முடித்த தமிழ்வேந்தன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 34 வயதான தமிழ்வேந்தன், புதுச்சேரி மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் உள்ளார். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ படித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த தமிழ்வேந்தன் தீவிரமாக கட்சிப்பணிகளை முன்னின்று செய்து வந்தார். இவரின் செயல்பாடுகளை கவனித்த புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பரிந்துரை செய்ய சீட் உறுதியானது என சொல்கின்றனர் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். 

வேட்பாளர் தேர்வு பற்றி புதுச்சேரி அதிமுகவினர் பேசுகையில், இளம் வயதான தமிழ்வேந்தன் மீது அதிமுக தலைமை நம்பிக்கை வைத்து முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக துணிச்சலுடன் அறிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வேந்தன். மீனவர் சமுதாயத்தை சேர்ந்த தமிழ்வேந்தன் எளிமையான குடும்ப பின்னணியில் வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையை நேரில் கண்டதால் நன்கு படித்து தமிழ்வேந்தன் ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ முடித்தார். அதன் பின், ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழிலுக்கு சென்று அதிலும் சிறப்பாக செயல்பட்டார். இதனிடையே, பொருளாதார ரீதியாக பின்தங்கி கல்வி கற்கும் மாணவர்கள், சுய தொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள், விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்கள், வயதானவர்களுக்கு மருத்துவ உதவி, அவர்களின் உணவுக்கான ஏற்பாடுகள் என தனது வருமானத்தின் ஒரு பகுதியை சத்தம் இன்றி செலவு செய்து வருகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

கடந்த 2013 ஆம் ஆண்டு, திராவிடக் கொள்கையில் ஈர்க்கப்பட்ட  தமிழ்வேந்தன் அதிமுகவில் இணைந்து மக்கள் சேவையை அரசியல் களத்திலும் தீவிரமாக செய்து வந்தார். இதையெல்லாம் கவனித்த அதிமுக தலைமை சரியான நேரத்தில தமிழ்வேந்தனுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். வேட்பாளர் அறிவிக்கப்பட்டு புதுச்சேரிக்கு பரப்புரைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி தமிழ்வேந்தனை அறிமுகப்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரம்மாண்ட கூட்டத்தைக் கூட்டிய தமிழ்செல்வன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தனது பலத்தை காண்பித்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ''புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்..'' என புதுச்சேரி மக்களின் பிரதான கோரிக்கையை முன்வைத்து பேசியிருந்தார். இந்த முறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என்பதே அதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருக்கிறது.

போதையின் பிடியில் இருந்து புதுச்சேரியை மீட்கும் கட்சி அதிமுக என்றும், புதுச்சேரியின் முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்த கட்சியும் அதிமுக தான் என பிரச்சாரத்தில் வேட்பாளர் தமிழ்வேந்தனின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வக்பு போர்டு வாரியம் அமைக்க போராடியது, ஜிப்மரில் உள்ளூர் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு போராட்டம், பொதுமக்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கவும் ரேஷன் கடைகள் திறக்கவும் நடத்தப்பட்ட போராட்டம் என அதிமுக கட்சியின் கள செயல்பாடுகளை முன்வைத்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக ஈடுபட்டு வருகின்றனர். எளிய பின்னணியில் வளர்ந்த வந்த தமிழ்வேந்தன் முதல் முறையாக போட்டியிடும் திருபுவனை மக்களவைத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அவரது ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.