Skip to main content

மோடியின் ஆறு ஆண்டு ஆட்சியின் வேதனைகள்... பட்டியலிட்டுள்ள கே.எஸ்.அழகிரி

Published on 31/05/2020 | Edited on 31/05/2020
narendra modi



மோடியின் ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்த ஒரு மக்கள் விரோத ஆட்சி என்றே மதிப்பீடு செய்வதே மிகமிக பொருத்தமாக இருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக ''மோடியின் ஆறு ஆண்டு ஆட்சியின் வேதனைகள்'' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

முக்கிய அம்சங்கள்
 

மோடியின் ஆறு ஆண்டு ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத  வேலையில்லா திண்டாட்டம், வறுமை 23 சதவிகிதம் அதிகரிப்பு.
 


கடந்த 11 ஆண்டுகளில் - 44 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி 3.1 சதவிகிதமாக கடும் வீழ்ச்சி. நிதி பற்றாக்குறை அதிகரிப்பு. தொழில்துறையின் உற்பத்தி 38.1 சதவிகிதமாக  வீழ்ச்சி.
 


வங்கி மோசடி செய்த மோடியின் நண்பர்களுக்கு ரூபாய் 68 ஆயிரத்து 607 கோடி கடன்  தள்ளுபடி. ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுப்பு.
 


கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 93 விகிதம் பா.ஜ.க.விற்கு  வழங்கப்பட்டுள்ளது. மொத்த நன்கொடை ரூபாய் 985 கோடியில், பா.ஜ.க.விற்கு மட்டும்  ரூபாய் 915 கோடி. பா.ஜ.க. ஒரு கார்ப்பரேட் ஆதரவு அரசு என்பதற்கு இதுவே சான்று.
 


கரோனாவினால் மக்கள்  அச்சம், பீதியுடன் வாழ்கின்றனர். வேலை, வருமானம் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து தத்தளிக்கும் மக்களுக்கு நேரிடையாக நிதியுதவி செய்யாத  6 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சியே.
 


பிரதமராக மோடி பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு பெறுவதை பா.ஜ.க.வினர் கொண்டாடுகின்றனர். இதுகுறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் சாதனை கடிதம் எழுதியுள்ளார். உண்மையிலேயே அவர்கள் கொண்டாடும் அளவுக்கு இந்த ஆறு ஆண்டுகளில் புரிந்த சாதனைகள் என்ன ? இந்தியாவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா  ? இதுகுறித்து ஆய்வு செய்து விமர்சிக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியின் கடமையாகும்.
 


கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயல்நாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்துவோம், விவசாயிகளின் விளை பொருளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்து வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க ஆண்டுக்கு இரண்டு கோடி பேர்களுக்கு என ஐந்தாண்டுகளுக்கு 10 கோடி பேர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்குவோம் என பலவிதமான வாக்குறுதிகளை வழங்கி, மக்களின் வாக்குகளை பெற்று பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், முதல் ஐந்தாண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. 
 


தேர்தலில் சாதனைகளை சொல்லி வாக்குகளை கேட்காமல் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்குகளைப் பெற்று மீண்டும் 2019 இல் பிரதமராக மோடி பதவியேற்றார். கடந்த ஆறு  ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நிகழ்ந்தது சாதனைகளா ? வேதனைகளா ? என்பதை ஆய்வு செய்தால் மிகுந்த ஏமாற்றமே ஏற்படுகிறது.


கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வேலையில்லா திண்டாண்டத்தால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புள்ளியல் ஆய்வக நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன. வறுமை 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
 


2019-20 ஆம் ஆண்டு நிதியாண்டில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஜனவரி, மார்ச் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு தற்போது ஆசியாவிலேயே மோசமான நிலையில் உள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
 


நிதி பற்றாக்குறை 3.3 சதவிகிதத்தில் இருந்து 4.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்திய தொழில்துறையின் உற்பத்தி 38.1 சதவிகிதமாக கடுமையாக குறைந்துள்ளது. கடந்த 44 காலாண்டுகளில் இத்தகைய வீழ்ச்சியை முதன் முறையாக இந்தியா கண்டுள்ளது. ஜனவரி - மார்ச் காலாண்டு என்பது கொரோனா பாதிப்பிற்கு முந்தைய காலமாகும். இந்த வீழ்ச்சியை உலக தர நிர்ணய அமைப்புகள் அனைத்தும் உறுதி செய்துள்ளன. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சமமற்ற வருவாய் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளதாக கிரெடிட் சூயிஸ்ஸி அறிக்கை தெரிவிக்கிறது.
 


உலகில் மோசமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட 30 நகரங்களில், இந்தியாவில் மட்டும் 22 நகரங்கள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் அதிக அளவிலான ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது தற்போது தான் நடந்துள்ளது. உலகிலேயே பெண்களுக்கு எதிராக கொடுமைகள் அதிக அளவில் நிகழும் நாடாக இந்தியா மாறியுள்ளதாக தாமஸ் ராய்ட்டர்ஸ் சர்வே தெரிவிக்கிறது.

 

K S Alagiri



மத்தியில் மோடி அரசு பதவியேற்றபின் ரூ. 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி வரை விதிகளை மீறி இந்தியாவில் உள்ள வங்கிகள் கடன் கொடுத்துள்ளன. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலை இல்லாமல் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்த பா.ஜ.க. அரசு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுத்து விட்டது. மோடி பிரதமரான பிறகு, பசுக்கள் தொடர்பான வன்முறை மற்றும் கும்பல் தாக்குதல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இதற்கு பா.ஜ.க.வின் மதவெறி அரசியலே காரணமாகும்.
 


இந்திய வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டு நிதியுதவியும், ஊழலும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன.   கடந்த 2016 முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 93 சதவிகிதம் பா.ஜ.க.விற்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆறு தேசிய கட்சிகளுக்கு மொத்தம் வழங்கப்பட்ட நன்கொடையான ரூபாய் 985 கோடியில், பா.ஜ.க.விற்கு மட்டும் ரூபாய் 915 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே அறக்கட்டளை பா.ஜ.க.விற்கு ரூபாய் 405 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை பா.ஜ.க.விற்கு ஒரு குறிப்பிட்ட அறக்கட்டளை வழங்குவதற்கு பின்னாலே இருக்கிற மர்மம் என்ன ?  பா.ஜ.க.விற்கு வழங்கப்பட்ட 98 சதவீத நன்கொடைகளில் வருமான வரித்துறையின் நிரந்தர கணக்கு எண்ணோ, முகவரியோ இல்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. 



மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையையும்  கார்ப்பரேட் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு வாரி வழங்கியுள்ளன. ஏழு தேசிய கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கிய நன்கொடை ரூபாய் 1397.90 கோடி. இதில் பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டது ரூபாய் 1027.34 கோடி. இது மொத்த நன்கொடையில் 73.5 சதவிகிதம் ஆகும். ஆக, பா.ஜ.க. அரசு ஒரு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான ஊழல் அரசு என்று சொல்வதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இந்த நன்கொடை பெறுவதில் பா.ஜ.க. நிகழ்த்திய முறைகேடுகள் குறித்து வருமான வரித்துறையோ, தேர்தல் ஆணையமோ இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய அமைப்புகள் எல்லாம் பா.ஜ.க.வின் கைப்பாவையாக மாறியுள்ளன.


கடந்த 70 ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தாத முதல் பிரதமர் மோடி. பாராளுமன்ற விவாதங்களிலோ, அமைச்சரவை ஆட்சி முறையிலோ நம்பிக்கையில்லாதவராக மோடி விளங்கி வருகிறார். ஜனநாயக அமைப்புகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில், சிபிஐ - சிபிஐ மோதல், ரிசர்வ் வங்கி - அரசு மோதல், உச்ச நீதிமன்றம்- அரசு மோதல் நடந்தது இந்தியாவிலேயே முதல்முறையாகும்.


இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்த சம்பவம் நடந்தேறியது. முதல்முறையாக பாதுகாப்புத் துறையின் முக்கிய ரகசிய ஆவணங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து திருடு போயின.
உலக அளவில் பட்டினியோடு வாழும் மக்கள் கொண்ட 117 நாடுகளில், இந்தியா 102 ஆவது இடத்தில் உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை வெளியிடுவதில் 2 ஆண்டுகள் தாமதம் ஆனது. சில முக்கிய அம்சங்களை தவிர்த்துவிட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டுக்கான குற்ற அறிக்கை கடுமையான தணிக்கைக்குப் பிறகு சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது.


அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கிரிமினல் மயமான அரசியலுக்கு பா.ஜ.க. முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் வழக்கும், பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சின்மயானந்தா மீதான வழக்கும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினராகி, தற்போது நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை குழுவில் இடம்பெற்றுள்ள பிரக்யாசிங் தாக்கூர் மீதான மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு சான்றுகள், மேலும் டிஎஸ்பி தேவேந்தர் சிங் வழக்கும் பல்வேறு காரணங்களால் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


தேர்தல் நிதியாக ரூ. 10 கோடியை ஆர்கேடபிள்யூ டெவலப்பர்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடம் பா.ஜ.க. பெற்றுள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக இதே நிறுவனத்திடம் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பா.ஜ.க.வின் தீவிரவாத எதிர்ப்பு வேஷம் இதன்மூலம் அம்பலமாகியுள்ளது.


கடந்த ஆறு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் படுபாதாளத்தில் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.  மக்கள் கையில் பணம் இல்லை. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு பொருளாதார பேரழிவிலிருந்து விடுபட இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. 


கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், சாவும் நாளுக்கு நாள் பலமடங்கு கூடி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் வளர்த்து வருகிறது. இத்தோடு கடுமையான பொருளாதார பேரழிவை நாடு எதிர்கொண்டு வருகிறது. இதிலிருந்து சாதாரண ஏழை,எளிய மக்களை மீட்க, அவர்களுக்கு நிதி வழங்கி, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? மக்கள் அடைந்த பயன் என்ன ? இதனால், மோடி ஆட்சி மீது மக்கள் கடும் வேதனையில் உள்ளதை எவரும் மறுக்க இயலாது. எனவே, ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது ஏழை, எளியவர்களை வாட்டி வதைத்த ஒரு மக்கள் விரோத ஆட்சி என்றே மதிப்பீடு செய்வதே மிகமிக பொருத்தமாக இருக்கும். இதை மக்களிடையே பரப்புரை செய்வது மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளின் கடமையாகும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.