
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் முகப்பு பகுதிகளில் இடம் பெற்றிருந்த ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தை நீக்கப்பட்டிருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுபொருளாகி உள்ளது. இது தொடர்பாகத் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதில், “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 2012 கால கட்டத்திலேயே அவர் துவக்கி வைத்த பேருந்திலேயே அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று தான் இருக்கிறது.
அப்போதே தமிழ்நாடு என்ற பெயர் எடுக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி என்று இப்பொழுது இருக்கிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் என்று எழுதினால் நீண்ட பெயராக இருக்கிறது. பேருந்துக்கு முன்பக்கம் இருப்பது படிப்பதற்கு வசதியாக இல்லை என்ற காரணத்தினால் அதிமுக ஆட்சியில் இருந்த காலத்திலே இவ்வாறு மாற்றப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 2012இல் நடந்தது இன்றைக்கு 2025இல் 13 வருடங்களுக்குப் பிறகு ஏதோ புதிய செய்தியைப் போலச் சிலர் தேவையற்ற சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த இந்த மாநிலத்திற்கே தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவுடைய பிள்ளைகள் நாங்கள். எனவே எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம். இது அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்டது. ஒரு ஆட்சியில் நடந்ததை அடுத்த ஆட்சி மாற்றுகிறார்கள் மாற்றுகிறார்கள் என்ற தொடர் குற்றச்சாட்ட எல்லாம் வைக்கின்ற காரணத்தினால் தான் சில விஷயங்களில் அப்படியே போக வேண்டியதாக இருக்கிறது” எனப் பேசினார்.