Skip to main content

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கக் கோரி தீர்மானம்?; மழைக்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை

Published on 27/05/2025 | Edited on 27/05/2025

 

Resolution seeking removal of Justice Yashwant Verma?

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஹோலி பண்டிகையை ஒட்டி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியதில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே அவரை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா கடந்த ஏப்ரல் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை முடியும் வரை, நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டார் என்றும், அவருக்கு எந்த நீதித்துறைப் பணியும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையில், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்தார். இந்த குழு, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கையை சமர்பித்தது. அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு சமர்பித்த ரகசிய அறிக்கையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு, பிரதமர் மோடிக்கும் அனுப்பினார். 

இந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் வரவுள்ள மழைக்கால கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்