Skip to main content

விரைவில் மா.செ.க்கள் மாற்றம்? ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஆலோசனையால் அ.தி.மு.க.வில் பரபரப்பு!!!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

eps-ops


அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ஒரு கடிதம் போயிருக்கிறது என்று அ.தி.மு.க. மேலிட வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதில், 'அம்மா ஜெ. எனக்குக் கொடுத்த கட்சியின் பொருளாளர் பதவியிலேயே நான் தொடரனும். அதேபோல் அம்மா இருந்த பொதுச் செயலாளர் பதவியில் சின்னம்மாவான நீங்கள்தான் இருக்கனும். அப்போதுதான், கட்சியைப் பழையபடி பலப்படுத்த முடியும். எடப்பாடி முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்ல. அவர், அம்மாவின் நம்பிக்கையைப் பெற்ற என்னையே மரியாதை இல்லாமல் நடத்துகிறார் என்று குறிப்பிட்டிருப்பதோடு, அமைச்சர்களில் 90 சதவீதம் பேர், உங்களைத்தான் அம்மாவின் மறுவடிவமாகப் பார்க்கிறார்கள் எனக் குறிப்பிட்டு, சசியின் மனதைக் குளிர வைத்துள்ளார் ஓ.பி.எஸ்' என்கிறார்கள்.
 


இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்ஸை அழைத்து பேசியிருக்கிறார். இவர்கள் இருவர் மட்டுமே இந்தச் சந்திப்பில் இருந்தாகவும், நீண்ட நேரம் இந்த ஆலோசனை நீடித்ததாகவும், இதில் தனது மன குமுறலைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள். நீண்ட நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் சில வாக்குறுதிகளை ஓ.பி.எஸ்.க்கு அளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அ.தி.மு.க. மேலிட தொடர்பில் உள்ளவர்கள். 
 

அமைச்சர்கள் தங்கள் துறையையே கவனிக்க வேண்டும், அடுத்த துறையில் தலையிடுவது கூடாது, கட்சிப் பொறுப்புகள் வழங்குவது, மாற்றுவது நமது இரண்டு பேருக்குள்ளேயே முடிவு எடுக்க வேண்டும், தேர்தல் வருவதால் சில மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும், மற்ற கட்சிக்கு இணையாக ஐ.டி. விங்கை பலப்படுத்த நிர்வாகிகளை மாற்ற வேண்டும், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இடமாறுதல் தொடர்பாக மற்ற அமைச்சர்கள் தலையீடுகள் இருக்கக் கூடாது, கரோனா விவகாரம் முடிந்த பின்னர் ஐ.பி.எஸ். இடமாற்றம் வைத்துக்கொள்ளலாம் என பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான உறுதிகளையும் ஓ.பி.எஸ்.க்கு எடப்பாடி கொடுத்துள்ளாராம்.
 


இந்தநிலையில்தான் அ.தி.மு.க.வின் ஊராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்புகளும் ரத்து செய்யப்படுகிறது என மே 19ஆம் தேதி அதிரடியாக இருவரும் அறிவித்துள்ளனர். மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அறிவித்து, சென்னை, மதுரை, கோவை, வேலூர் என நான்கு மண்டலங்களாகப் பிரித்து, இந்த நான்கு மண்டலத்திற்கும் நான்கு செயலாளர்களை நியமித்துள்ளனர். இந்த நான்கு மண்டலங்களுக்கும் துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதில் கோவை, வேலூர் மண்டலங்களில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிகம் இருப்பார்கள், சென்னை, மதுரை மண்டலங்களில் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிகம் இருப்பார்கள் எனவும், ஓ.பி.எஸ்.ஸை எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தியுள்ளதால் கட்சியில் மா.செ.க்கள் மாற்றம் என எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்? எனவும் தெரிவிக்கிறார்கள் அ.தி.மு.க. மேலிட தொடர்பில் உள்ளவர்கள். இந்தத் தகவலால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


-மகேஷ்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.