இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? எனத் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ நாடாளுமன்றத்தில் அவை மரபுகளைப் பற்றிப் பேசி சிலாகிக்கும் மோடிக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா?. தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவியோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை.
ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்றச் சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் எனக் கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையைப் படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
சட்டப்படி மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையைத் தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் அதைத் தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்குக் கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையைப் பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே?” எனத் தெரிவித்துள்ளார்.