
இந்த ஆண்டின் (2025) இறுதிக்குள் சென்னையில் உள்ள பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கவும், மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து பூந்தமல்லியில் இருந்து போரூர் வழித்தடத்தில் சுமார் 2.5 கி.மீ தொலைவுக்கு முதற்கட்டமாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கடந்த மார்ச் மாதம் (21.03.2025) நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை கடந்த ஏப்ரல் மாதம் (28.04.2025) நடைபெற்றது. அதாவது சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயிலுக்கான பணிகள் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்கள் நடைபெற்று வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி இடையிலான 26.1 கி.மீ. தூரத்திலான 4வது வழித்தடத்தில் முதல் கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி பணிமனை முதல் முல்லை தோட்டம் வரை 2.5 கிமீ. தூரத்திற்கு 25 கி.மீ. வேகத்தில் நடைபெற்றது. அதே போன்று 2ஆம் கட்ட சோதனை ஓட்டமானது பூந்தமல்லி பணிமனையில் இருந்து போரூர் வரை 9.5 கி.மீ தொலைவிற்கு 30 முதல் 35 கி.மீ. வேகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று (06.06.2025) போரூரில் இருந்து பூந்தமல்லி வரை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. முதல் 2 கட்ட சோதனை ஓட்டங்கள், அப்லைனில் நடைபெற்ற நிலையில் தற்போது டவுன்லைனில் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை முதல் முறையாகச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 20 கி.மீ. இலிருந்து 25கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.