Skip to main content

வித்தியாசமான முயற்சி கவனம் பெற்றதா? - 'எனக்கு என்டே கிடையாது' விமர்சனம்!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

enakku endey kidaiyathu movie review

 

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ரெகுலர் இன்டெர்வளில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளியாகும் சில படங்கள் நல்ல கவனம் பெறும். அந்த வகையில் தற்போது ரிலீசாகி இருக்கும் எனக்கு எண்டே கிடையாது திரைப்படம் எந்த அளவு கவனம் பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்....

 

டாக்ஸி டிரைவராக வரும் நாயகன் விக்ரம் ரமேஷ் நாயகி சுவயம் சித்தாவை ஒரு பாரில் இருந்து பிக்கப் செய்கிறார். இருவரும் காரில் பயணம் செய்யும் பொழுதே பேசி நண்பர்களாக மாறுகின்றனர். இதைத் தொடர்ந்து சுவயம் சித்தா மது அருந்த விக்ரமை தன் வீட்டிற்கு அழைக்கிறார். இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர். போன இடத்தில் இருவரும் மது அருந்திவிட்டு மயக்கமாகி மட்டையாகி விடுகின்றனர். சில மணி நேரங்கள் கழித்து கண் விழிக்கும் விக்ரம் கழிவறை செல்ல முற்படும் நேரத்தில் ஓர் அறையில் ஒரு பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். உடனே அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் நேரத்தில் சுயம் சித்தா அங்கு வந்து விடுகிறார். இவர்களுக்குள் நடக்கும் தள்ளும் முள்ளுவில் சுயம் சித்தா இறந்து விடுகிறார்.

 

முழுக்க முழுக்க ஸ்மார்ட் வீடாக இருக்கும் அந்த பங்களாவில் இருக்கும் கதவுகளுக்கு பாஸ்வேர்டு லாக் போட்டு இருப்பதால் விக்ரமால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இதை அடுத்து அவர் தப்பிக்க அல்லாடும் நேரத்தில் அங்கு திருடன் கார்த்திக் அந்த வீட்டினுள் திருட வருகிறார். அதேபோல் அரசியல்வாதி மஸ்தான் பாயும் அந்த வீட்டிற்குள் ஒரு பணப்பெட்டியுடன் நுழைகிறார். அரசியல்வாதியை கண்ட விக்ரமும் திருடன் கார்த்திக்கும் ஒவ்வொரு இடத்தில் அவரவர்கள் ஒழிந்து கொள்கின்றனர். இதை அடுத்து மூவரும் ஒரு கட்டத்தில் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் அடிதடியோடு மோதிக் கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து மூவருக்குள்ளும் ஒரு கட்டத்தில் சமாதானம் ஏற்பட்டு எப்படி அந்த வீட்டை விட்டு வெளியே தப்பிப்பது என எடுக்கும் முயற்சியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை இந்த படத்தின் மீதி கதை.

 

இந்தப் படத்தின் நாயகன் விக்ரம் ரமேஷ் இப்படத்தை கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு சின்ன கதையை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேர படமாக மாற்றி அதை ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சிக்கு ஓரளவு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. படத்தை முழுக்க முழுக்க ஒரு பங்களாவுக்கு உள்ளேயே எடுத்திருந்தாலும் அதை சற்று அயற்சி இல்லாமல் கொடுத்து இருப்பதே இந்த படத்திற்கு சற்று பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அந்த அளவு ஒரு சிறிய கதையை குழப்பம் இல்லாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார். அதேபோல் இவர் நடிப்பிலும் ஒரு தேர்ந்த நடிகரைப் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

 

இயக்குநர் விக்ரமுடன் திருடனாக நடித்திருக்கும் கார்த்தி இப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். அவரும் தன்னுடைய சிறப்பான நடிப்பால் அறிமுக நடிகர் என்ற உணர்வைத் தர மறுக்கிறார். இவருக்கும் விக்கிரமுக்குமான கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக அமைந்து படத்தை வேகமாக நகர்த்தி செல்ல உதவி செய்திருக்கிறது. இருவரும் எதார்த்தமான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளனர். அரசியல்வாதியாக வரும் மஸ்தான் பாய் அவருக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். நாயகியாக வரும் சுயம் சித்தா எப்போதும் போல் கவர்ச்சி காட்டி பின்பு நடிப்பில் அவருக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். 

 

இந்தப் படத்தில் மற்றொரு பெரிய பிளக்ஸ் ஆக பார்க்கப்படுவது கலை இயக்கமும் ஒளிப்பதிவும் ஆகும். ஒரு ஸ்மார்ட் பங்களாவிற்குள் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டுமோ அதை எல்லாம் சிறப்பாக அமைத்துக் கொடுத்து கதைக்கு ஒத்துழைப்பு தரும்படியான கலை இயக்கத்தை சிறப்பாக கையாண்டு படத்திற்கு ஒரு ரிச்நெஸ்சை கூட்டி இருக்கிறார் ஆர்ட் டைரக்டர் சூர்யா. அதேபோல் ஒரு பங்களாவுக்குள்ளேயே முழு படமும் எடுக்கப்பட்டு இருப்பதால் சுவாரஸ்யமாக காட்சிகளை கொடுக்க மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு வேகத்தைக் கூட்டி இருக்கிறது. சூர்யாவின் கலை இயக்கத்தை இன்னமும் நன்றாக மெருகேத்தி காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம். இவர்களுக்கு தன் பின்னணி இசை மூலம் பக்க பலமாக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் கலா சரண். படத்தொகுப்பாளர் முகன் வேலும் தனது பங்குக்கு நிறைவான படத்தொகுப்பை கொடுத்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்து உள்ளார். 

 

முற்றிலும் புது முகங்கள் நடித்து வெளியாகி இருக்கும் எனக்கு என்டே கிடையாது திரைப்படம் வித்தியாசமான முயற்சியின் மூலம் சற்று கவனம் பெற்று இருக்கிறது.

 

எனக்கு எண்டே கிடையாது - நல்ல முயற்சி!


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். 

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.