Skip to main content

தீர்த்த யாத்திரை சென்று திரும்பிய ரிஷி... 5 வயது குழந்தைக்கு தாயாகி அதிர்ச்சி கொடுத்த வளர்ப்பு மகள்!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டதின் மூன்றாம் பகுதி பின்வருமாறு...

கடந்த பகுதி...

 

மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து கடந்த இரு பகுதிகளில் பேசியிருந்தேன். அதனுடைய தொடர்ச்சியைத் தற்போது பார்க்கலாம். பல தலைமுறைகள் கடந்து பரதன் என்பவரை மையப்படுத்தி கதை வந்து நிற்கிறது. அந்தப் பரதன் சகுந்தலையின் மகன். சகுந்தலை, விஸ்வாமித்திரருக்கும் மேனகிக்கும் பிறந்த குழந்தை. வசிஷ்டருக்கு விஸ்வாமித்திரர் வில்லன். விஸ்வாமித்திரருக்கு வசிஷ்டர் வில்லன். தனக்கு நிகராக யாரும் இல்லை என்ற வரத்தை விஸ்வாமித்திரர் தவம் புரிந்து வாங்கிவிட்டார். அந்த வரத்தை எப்படியாவது பொய்யாக்க வேண்டும் என்று தேவலோக தாசிகளில் ஒருவரான மேனகி அவரிடம் அனுப்பப்படுகிறார். விஸ்வாமித்திரர் பிரம்மச்சாரி. அவருடைய கொட்டத்தை அடக்கி வைராக்கியத்தை உடைக்கும்படி ஒரு பிள்ளையைப் பெற்றுவிட்டு வா என்று வசிஷ்டரும் இந்திரனும் தேர்ந்து அவளை அனுப்பிவைக்கின்றனர். 

 

அப்படி வந்த மேனகி, தவத்தில் இருந்த விஸ்வாமித்திரரை மயக்கி அவருடன் உடலுறவு கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றுவிடுகிறாள். “நீ ஏதோ தவறு செய்துவிட்டாய்... எந்தக் காரணம் கொண்டும் இந்தக் குழந்தையை நான் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று விஸ்வாமித்திரர் கூறிவிடுகிறார். அவள், “உனக்குப் பிறந்த குழந்தைதானயா... நீ ஏற்றால் என்ன, ஏற்காவிட்டால் என்ன... நான் இந்திரலோகத்திற்குச் செல்கிறேன்” என்று கூறி அந்தக் குழந்தையை அவர் காலடியில் வைத்துவிட்டு கிளம்பிவிடுகிறாள். விஸ்வாமித்திரரும் அங்கிருந்து நகர்ந்துவிட, அந்தக் குழந்தை அனாதையாக கத்தி அழுதுகொண்டிருந்தது. சாகுந்த பட்சி என்ற பறவை அங்கு வந்து தனது இறக்கையை குடைபோல விரித்து மழையில் இருந்தும் வெயிலில் இருந்தும் அந்தக் குழந்தையைப் பாதுகாத்தது. அந்தக் குழந்தைதான் சகுந்தலை என அறியப்படுகிறது.  

 

பின்னர், அந்த ஏரியாவில் இருந்த கண்வர் ரிஷி என்ற ஒரு ரிஷி, அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பிக்கிறார். கண்வர்ரிஷியின் ஆசிரமத்தில் வளர்ந்துவந்த சகுந்தலை, ஒரு காலத்தில் பருவமடைகிறாள். ஒருநாள் தன் ஆட்களுடன் தீர்த்த யாத்திரைக்கு அந்த ரிஷி கிளம்புகிறார். கிளம்புவதற்கு முன், நான் வரும்வரை இவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஆசிரமத்தில் இருந்த பெண்களிடம் கூறிவிட்டுக் கிளம்புகிறார். 

 

அந்த சமயத்தில் மகாராஜா துஷ்யந்தன் வேட்டைக்கு வருகிறார். வந்த இடத்தில் சகுந்தலையை பார்த்த துஷ்யந்தன், அவள் அழகைக் கண்டு வியந்துவிடுகிறான். “நீ யார் மகள்” என அவளிடம் கேட்க, அவள் “நான் கண்வர்ரிஷியின் வளர்ப்பு மகள்” என்கிறாள். அவளை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக துஷ்யந்தன் கூறுகிறான். அவளும் சம்மதம் தெரிவித்துவிட இருவருக்கும் இடையே உடலுறவு ஏற்பட்டு சகுந்தலை கர்ப்பம் ஆகிவிடுகிறாள். பின், அங்கிருந்து கிளம்பிய துஷ்யந்தன், “தீர்த்த யாத்திரையிலிருந்து உன் தந்தை திரும்பி வரட்டும்... சேனைகளுடன் வந்து முறைப்படி அவரிடம் ஆசீர்வாதம் பெற்று என் அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன்” எனக் கூறுகிறான். அவளிடமிருந்து விடைபெற்று சென்றுகொண்டிருந்த துஷ்யந்தன், எதிரே வந்த ஒரு ரிஷி மீது மோதிவிடுகிறார். அதில் கோபமான ரிஷி, “எவளை நினைத்துக்கொண்டே வந்து என் மீது மோதினாயோ, அவளை நீ மறந்துவிடுவாயாக” எனச் சாபம் கொடுத்துவிடுகிறார். அதேபோல துஷ்யந்தன் அவளை மறந்துவிடுகிறான். இப்படி ஒரு பெண்ணை விரும்பி, அவளை கர்ப்பம் ஆக்கினோம் என்பது அவன் நினைவிலேயே இல்லை. 

 

ஆண்டுகள் பல கழிந்தன. தீர்த்த யாத்திரைக்குச் சென்ற கண்வர்ரிஷி திரும்பி வந்துவிடுகிறார். ஐந்து வயது குழந்தையுடன் சகுந்தலை இருப்பதைக் கண்டு அவருக்கு அதிர்ச்சி. பின், நடந்தது குறித்து அவளிடம் விசாரிக்கையில், துஷ்யந்தன் மன்னன் என்று ஒருவர் வந்தார்... “நீங்கள் வந்த பிறகு உங்கள் சம்மதத்துடன் என்னை அழைத்துச் செல்வதாகக் கூறினார்” என நடந்தது அனைத்தையும் விவரிக்கிறாள். “எப்போது உன் கற்பை நீ அவனுக்குக் கொடுத்தியோ... இனி நீதான் அவனிடம் சென்று பேச வேண்டும். நான் வந்து பேசி அவனிடம் அவமானப்பட தயாராக இல்லை. அவன் உன்னை ஏற்றுக்கொண்டால் சேதி அனுப்பு. நான் வந்து உன்னைப் பார்க்கிறேன்” எனக் கூறிவிடுகிறார் கண்வர்ரிஷி. உடனே துஷ்யந்தனை சந்திக்க தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு கிளம்பிய சகுந்தலை, பல மைல்கள் நடந்தே செல்கிறாள். 

 

எங்கெல்லாம் தங்க முடியுமோ அங்கெல்லாம் தங்குகிறாள். அப்படி ஒரு இடத்தில் தங்கியிருக்கையில் அங்கிருந்த சிங்கம், புலிகளோடு சிறுவன் பரதன் விளையாடிக்கொண்டிருக்கிறான். பரதன் பார்க்க ராஜஅம்சத்துடன் தெய்வீகமான குழந்தையாக இருப்பான். அப்போது அந்த வழியாக விஸ்வாமித்திரர் வருகிறார். ஒரு குழந்தை சிங்கத்துடன் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவருக்கு ஆச்சர்யம். அருகே வந்து, “குழந்தாய் நீ யாரப்பா” என்கிறார். அதற்குப் பரதன், “நான் வீரன்” என்கிறான். பதிலுக்கு “என்ன வீரன்” என அவர் கேட்க, ”நான் மகாவீரன்” என்கிறான். “யார் மகன் நீ” என அவர் கேட்க, “நான் மகாராஜரின் மகன், என் அம்மா சகுந்தலை” என்கிறான். “உன் அம்மாவை நான் பார்க்கலாமா” என அவர் கேட்க, விஸ்வாமித்திரரை அம்மாவிடம் அழைத்துச் செல்கிறான் பரதன். 

 

சகுந்தலையிடம் “நீ யாரம்மா” என்று விஸ்வாமித்திரர் விசாரிக்க, “நான் விஸ்வாமித்திரரின் மகள்” என்று கூறுகிறாள் சகுந்தலை. விஸ்வாமித்திரருக்கு அதிர்ச்சி. அவருக்குப் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவுக்குவருகிறது. “உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்தப் பாவி விஸ்வாமித்திரர் நான்தான்மா” என்று அவர் கூற, “அப்பா” என்று கட்டியணைத்து சகுந்தலை அழுதுவிடுகிறாள். உடனே பரதனை தூக்கித் தன் நெஞ்சில் வைத்து கொஞ்சுவார் விஸ்வாமித்திரர். அதன் பிறகு, “துஷ்யந்தனோடு உன்னை சேர்த்துவைக்கிறேன்” என்று கூறி, சகுந்தலையையும் பரதனையும் விஸ்வாமித்திரர் அழைத்துச் செல்வார். துஷ்யந்தன் ராஜ்யத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

 

 

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.