
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் போஸ்ட் மேன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவா - பாரதி தம்பதி. இவர்களுடைய மகள் அக்ஸயா(18). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் விஜய்(25) என்பவரும் கடந்த ஒரு வருட காலமாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இதனை அறிந்த பெற்றோர்கள் காதலர்களைக் கண்டித்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும் பெண் வீட்டார் பெண்ணை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். பின்னர் காதலர்கள் இருவரும் தப்பி ஓடியது தெரிய வந்தது. ஆத்திரமடைந்த பெண் வீட்டார் இன்று விஜய்யின் வீட்டை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். இதன் காரணமாக வீட்டில் மளமளவென தீ பற்றி எரிந்தது.
இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கையில், விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பெட்ரோல் ஊற்றித் தீயைப் பற்ற வைத்த அக்ஸயாவின் தந்தை சிவா மற்றும் அண்ணன் அழகேசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் பெண் வீட்டார், காதலர் விஜய் வீட்டை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.