Skip to main content

விஷாலிடம் ஒருகோடி நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்

Published on 14/02/2018 | Edited on 15/02/2018

நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார் ‘கங்காரு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்த சமயத்தில் இருந்தே விஷாலுக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி வருபவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் சமூக வலைதளங்களிலும் விஷாலை நேரடியாக எதிர்த்து எழுதி வருபவர். இந்நிலையில், தான் தயாரித்து இயக்கி வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தின் கதையை வெளியிட்டு விஷால் தரப்பு தன்னை வியாபாரா ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது என்றும், அதற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் விஷால் தரப்பிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

‘தயாரிப்பாளர் தேர்தலில் விஷால் தரப்பிற்கு எதிராக நின்றதனால் விஷாலும் அவரது ஆதரவாளர்களும் என்மேல் வன்மம் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றிய பல தவறான தகவல்களை திரையுலகில் பரப்பி வருகின்றனர். சென்ற வருடம் நான் உட்பட 107 தயாரிப்பாளர்களின் பெயர்களை காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கினார்கள். அடுத்து நடைபெற்ற சங்க கூட்டத்தில் சங்கத்தின் பெயரில் வாங்கப்பட்ட 4 கோடி ரூபாய் கடனைப் பற்றி நான் கேள்வியெழுப்பியபோது சரிவர பதில் சொல்லாமல் வெளியேறினார்கள். வெளியேறும்போது விஷால் நேரடியாக என்னை திரையுலகத்திலிருந்து ஒழித்துக்கட்டுவேன் என்று சவால் விட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு நான் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மிக மிக அவசரம்’ படம் வெளியாவதைப் பற்றி அறிவித்திருந்தேன். அதிலிருந்து என்னைப் பற்றியும் எனது படத்தையும் தவறான நோக்கத்தில் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார்கள். மேலும் எனது படத்தின் கதையையும் வாட்சாப் க்ரூப்களில் வெளியிட்டு வருகிறார்கள். இது எனது படத்தின் வியாபாரத்தை பெரிதாக பாதித்துள்ளது.

மனதளவிலும் வியாபாரத்திலும் பெரும் பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியதற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். இல்லையென்றால் தகுந்த சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘ஏற்கனவே என் மேல் இருக்கும் கோபத்தால் பழிவாங்கும் நடவடிக்கையாக இதுபோன்ற விஷயங்களை செய்து வருகிறார்கள். ஒரு திரைப்படத்தின் கதையை வெளியாகும் முன்னே லீக் செய்வது அந்த படத்திற்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு தயாரிப்பாளருக்கு நன்கு தெரியும். தயாரிப்பாளராய் இருந்துகொண்டு, அதுவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துகொண்டு விஷால் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. இது ஒரு குழந்தையை சிசுவிலேயே கொல்வதற்கு சமம்’ என்றார் வேதனையுடன்.

நடிகர் விஷால், விஷால் ஃப்லிம் ஃபேக்டரியின் மேனேஜர் ராஜசேகர் மற்றும் அனைத்திந்திய புரட்சித் தளபதி விஷால் நற்பணி இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஹரிஹரன் ஆகிய மூன்று பேருக்கு இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் நான் இல்லை” - விஷால்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Vishal says I am not one to say that I will come to politics and then back off

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே தனது அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஷால். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விஷால், “இனி வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். .

இந்த நிலையில், விஷால் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் இல்லை. சினிமா போன்று அரசியல் கிடையாது. அரசியல் என்பது சமூக சேவை. அது துறை கிடையாது. அரசியலை பொழுதுபோக்காக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும். எல்லாரும் அரசியல்வாதிகள் தான். 2026 ஆம் ஆண்டில் தேர்தல் வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையில்லை. தற்போது அதிக கட்சிகள் உள்ளன. நல்லது செய்ய முடியும் என்றால் மட்டுமே அரசியலுக்கு வருவேன்” என்று கூறினார். 

Next Story

“பாழாப்போன அரசியல் இப்படி பார்க்க வைத்துவிட்டதே” - கலங்கிய தயாரிப்பாளர்

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
producer suresh kamatchi about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அதில் ஒரு ரசிகர் விஜயகாந்த்திற்குத் தனது உறுப்புகளைத் தரத் தயாராக இருப்பதாக வெளிநாட்டிலிருந்து வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் திரைப் பிரபலங்களும் அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பினார்.

இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அவரைப் பார்த்து அவரது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். மேடையில் நாற்காலியில் அமர்ந்த அவர் திடீரென்று சரிந்து விழப் பார்த்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பதறியடித்தபடி அவரைப் பிடித்து உட்கார வைத்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் சமூக வலைத்தளங்களில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து வேதனையடைந்தனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜயகாந்த் உடல் நலம் குறித்து எக்ஸ் தளத்தில் மனம் திறந்துள்ளார். அந்தப் பதிவில், “கேப்டன்... ஆரம்பத்துல எந்தக் கப்பல்ல கேப்டனா இருந்தாரு விஜயகாந்துன்னு கிண்டல் பண்ணவங்க... பின்னர்தான் புரிந்துகொண்டனர். அவர் சினிமாவில் சிதைந்து கிடந்த பல கப்பல்களை சரிசெய்தவர் என்று. அதன்பிறகு கிண்டலடித்த அதே வாய்கள் கேப்டன் கேப்டன் என வாயாரக் கூப்பிடத் தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவராக இருக்கும்போது அச்சங்கத்தை தலை தூக்கி நிறுத்தியவர் அவர். கலை நிகழ்ச்சியொன்றில் ரஜினி கமல் என நட்சத்திரப் பட்டாளங்களைக் கையாண்டு கடனையடைத்தவர். சொன்னதை செய்து காட்டுவதையே இலட்சியமாக வைத்திருந்தவர். 

நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில், வரிசையாக பேருந்துகள் அவர்களை ஏற்றிச் செல்ல வந்தபோது பல கலைஞர்கள் பஸ்ஸிலா? என தயங்கி நின்றபோது, ஒரு பேருந்திலிருந்து கையசைக்க ‘சூப்பர் ஸ்டாரே பேருந்தில்தான் போகிறாரா?  நாமும் ஏறிக்கொள்வோம்’ என பேருந்துகள் நிறைந்தன. இதன் பின்னால் விஜயகாந்தின் அதிபுத்திசாலித்தனமும் நிறைந்திருந்தது என சொல்லக் கேள்வி. எல்லா நடிகர்களும் பேருந்தில் ஏறந் தயங்குவார்கள் என அறிந்திருந்த விஜயகாந்த் சூப்பர் ஸ்டாரிடம், ‘நீங்க முதல்ல பேருந்தில் ஏறிட்டா அப்புறம் அனைவரும் ஏறிடுவாங்க’ என சொல்லியிருக்கிறார். ‘அதற்கென்ன ஏறிட்டாப் போச்சு’ என தனக்கேயுரிய பாணியில் சொன்னதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். 

தவிர, நடிகர் சங்கத்தில் ஒரு நடிகர் மீதோ, நடிகை மீதோ புகார் வந்தால் அழைத்து விசாரிப்பார். சம்பந்தப்பட்ட நடிகர் நடிகை மீது தவறு இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்திற்குச் சென்று மன்னிப்புக் கேட்டு சுமூகமாக அந்தப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அனுப்பி வைப்பார். நடிகர் நடிகைகள் மீது தவறில்லை என்றால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் நடிகர் சங்கம் வந்துதான் தீர்வு காண வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக நிற்பார். தன் உடன் பிறந்த சகோதரர்களாய் ஒவ்வொரு உறுப்பினரையும் மதித்தவர். நல்ல மனிதன் என அனைவரிடமும் பெயரெடுத்தவர். படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் சமமான, தரமான உணவு... யார் வந்தாலும் அடைக்கலம் என தன்னிகரற்ற மனிதராய் விளங்கியவர் கேப்டன். எல்லோரும் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க மறுத்தபோது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் எனவும், மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டவர். 

காவிரியில் நீர் தர கர்நாடகா மறுத்தபோது, அம்மாநிலத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்துவோம் என குரல் கொடுத்து நெய்வேலி போராட்டம் நடந்தது. அப்போது 5,000  நடிகர்களை ஒன்று திரட்டி போராடியவர். அரசியலுக்கு முழுக்க தகுதியான மனிதர்... தகுதியான நேரத்தில் களமிறங்கி அதில் தனது கணக்கை அட்டகாசமாகத் தொடங்கியவர் உடல் நலத்தை விட்டுவிட்டார். உடல் நலம் பேணாததற்கு அரசியலே மிக முக்கிய காரணமாகிவிட்டது. எனக்கெல்லாம் மாபெரும் நம்பிக்கை இருந்தது கேப்டன் பழையபடி சிங்கமாக கர்ஜிக்க வந்துவிடுவார் என்று. ஆனால் சமீபத்திய அவரது காணொளியைப் பார்த்தபோது கண்ணீர்தான் வந்தது. பாழாப்போன அரசியல் அவரை இப்படி நம்மை பார்க்க வைத்துவிட்டதே எனக் கலங்கிப் போனேன். 

தவிடு பொடியாக்கும் ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைப் போல இருந்தவரை வீல் சேரில் வைத்து அரசியல் செய்ய அழைத்து வந்தபோது நெஞ்சே உடைந்துவிட்டது. மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்?  என குமைந்து போனேன். இந்த சமூகத்தோடு, அரசியல் எதிரிகளோடு, தன் உடல் நலத்தோடு எவ்வளவோ போராடிவிட்டார்! இன்னுமா போராட வேண்டும்? தான் எந்நிலையிலிருந்தாலும் போராடிக் கொண்டே இருப்பது சரியல்ல. இப்போதுதான் தலைமை மாறிவிட்டதே... இனியேனும் அவரை வதைக்காமல் பாதுகாத்து வைப்போம். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமோடு நம்மோடிருக்கட்டும் என்பதே என் ஒரே ஆசை. கேப்டன் உங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பல கோடி பேரில் நானும் ஒருவன். நலமே சூழ்க உம்மை” என குறிப்பிட்டுள்ளார்.