Skip to main content

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை! காதலனுக்கு 7 ஆண்டுகள் சிறை!!

Published on 12/11/2019 | Edited on 13/11/2019

கிருஷ்ணகிரி அருகே, திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து குடிக்க வைத்து கொலை செய்த காதலனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஜெகதேவி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் மனோகரன் (28). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ரேகா (25) என்பவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இருவரும் சொந்த ஊரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக (லிவிங் டுகெதர்) குடும்பம் நடத்தி வந்தனர். பலரும் பலவாறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், ஒரு கட்டத்தில் ரேகா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மனோகரனிடம் நச்சரிக்கத் தொடங்கினார். இதற்கிடையே, வரதட்சணை கொடுத்தால்தான் ரேகாவை மருமகளாக ஏற்றுக்கொள்வோம் என்று மனோகரனின் பெற்றோர் கூறியுள்ளனர். 

krishnagiri incident cool drinks police investigation


இதையடுத்து ரேகா, தனது தாய் செல்வராணியிடம் இருந்து 61500 ரூபாய் வாங்கி வரதட்சணையாக மனோகரன் குடும்பத்தினரிடம் கொடுத்தார். ஆனால் அதன் பிறகும், திருமணம் செய்யாமல் மனோகரன் காலம் கடத்தி வந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ரேகா, திருமணத்திற்கு வற்புறுத்தி வந்ததால் ஆத்திரம் அடைந்த மனோகரன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 2012ம் ஆண்டு பிப். 22ம் தேதி, ரேகாவை பர்கூரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்றார். 


‘நாம் இருவரும் கல்யாணம் செய்து கொண்டுதான் வாழ வேண்டுமா? இப்போதே நாம் கணவன், மனைவியாகத்தானே இருக்கிறோம். நமக்குள் பிரச்னை வராமல் இருக்க, நாம் இருவரும் விஷம் குடித்து இறந்து விடலாம்,’என்றெல்லாம் ஏதேதோ பேசி அவரையும் தற்கொலைக்கு தூண்டினார். பின்னர் இரண்டு டம்ளர்களில் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து, அதில் ஒரு டம்பளரை ரேகாவுக்கு கொடுத்துள்ளார் மனோகரன். அவர் குடித்த பிறகு, மனோகரன் தான் விஷ குளிர்பானத்தைக் குடிக்காமல் கீழே ஊற்றிவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்வதற்குள் ரேகா சிறிது நேரத்தில் இறந்தார். 


இதுகுறித்த புகாரின்பேரில், அப்போதிருந்த பர்கூர் காவல் ஆய்வாளர் சம்பத்குமார், ரேகாவை கொலை செய்த குற்றத்திற்காக மனோகரன், உடந்தையாக இருந்த அவருடைய தாயார் இந்திராணி, தந்தை பெருமாள், உறவினர் ராசாத்தி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தார். இந்த வழக்கின் விசாரணை, கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜராகி வாதாடினார். இருதரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் திங்கள்கிழமை (நவ. 11, 2019) தீர்ப்பு வழங்கப்பட்டது. 


முதல் குற்றவாளியான மனோகரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்திராணி, பெருமாள், ராசாத்தி ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.