
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அப்பகுதியைச் சேர்ந்த சண்முகம், ஜெயராமன், சக்தி மயில், மணிமாறன் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் பைபர் படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அந்த வகையில் கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகின் மீது மோதி அச்சுறுத்தினார். அதோடு மீனவர்களின் வலைகளின் மீது ரோந்து கப்பல் கப்பலை ஏற்றிச் சேதப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சுமார் மேலும் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் ஜி.பி.எஸ். கருவி, மீன்கள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி தளவாட பொருட்களையும் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் மீனவர்கள் கரை திரும்பாத வண்ணம் அவர்களிடம் இருந்த எரிபொருளையும் இலங்கை கடற்படையினர் பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். இதனால் மீனவர்கள் டீசல் இல்லாமல் கரை திரும்ப முடியாமல் தவித்துள்ளனர். அச்சமயத்தில் அவ்வழியே சென்ற சக மீனவர்கள் மீனவர்கள் டீசல் வழங்கி கரை திரும்ப உதவியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி வலைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் மீனவ கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.