Skip to main content

‘வாழ்வோம் வாழவைப்போம்’ மக்களின் வாழ்கையைக் கெடுத்த நகைக்கடை நிறுவனம்!

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

 jewelery company that scammed people in Nellai

 

“உங்க பணத்துக்கு நாங்க கியாரண்டி. நம்பி வாங்க சந்தோஷமா போங்க. வாழ்வோம் வாழ வைப்போம்”என்ற ஆசை வார்த்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நகைக்கடை மோசடி குறித்த தகவல், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனது யூடியூப் சேனலில் ஸ்போக்கன் ஹிந்தி கிளாஸ் எடுத்து வருபவர். அதுமட்டுமின்றி, திருநெல்வேலியில் உள்ள சேரன்மாதேவி தாலுகாவில், நெக்ஸ்ட் ஜென் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், சுந்தர் அந்த நிறுவனத்தில் கொரோனா கோல்ட் பிஸ்னஸ் என்ற திட்டம் ஒன்றை தொடங்கி, அதில் 10 கிராம் தங்கம் வாங்கினால் 24 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்துள்ளார்.

 

மேலும், அவரது யூடியூப் பக்கத்தில், "எங்க நெக்ஸ்ட் ஜென் ஜுவல்லர்ஸ்ல நீங்க நகை வாங்குங்க. நா உங்கள பணக்காரனா ஆக்குறேன். உங்க பணத்துக்கு நாங்க கியாரண்டி. நம்பி வாங்க சந்தோஷமா போங்க. வாழ்வோம் வாழ வைப்போம்" என ஆசை வார்த்தைகளுடன் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி,  “உங்களால 10 கிராம் தங்கம் வாங்க முடியலையா? அப்ப வெறும் 8000 ரூபாய் பணத்த கட்டி இந்த திட்டத்தில் சேர்ந்துக்கோங்க. ஒருவேளை உங்களுக்கு இந்த பிசினஸ் பிடிக்கலைன்னா, மூணு மாசத்துக்கு அப்புறம், உங்க பணத்த கொடுத்துடுவோம். ஆனால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என நம்பிக்கை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளனர்.

 

இதையடுத்து, இந்த திட்டத்தை உண்மை என நம்பிய அப்பாவி பொதுமக்கள், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் இணைந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக, அவர்களிடம் ஸ்டேஜ் என்ற முறையில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். இந்த பிசினஸை சுந்தரின் மனைவி ஜெபகனி மற்றும் அவரது மகன் விஜய் என மூவரும் இணைந்து நடத்தி வந்துள்ளனர்.

 

அதே போல், ஆரம்பத்தில் அவர்கள் சொன்னதை போல், முதலில் சேர்ந்த நபருக்கு 24 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி தரப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு நெக்ஸ்ட் ஜென் நிறுவனம் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது.  இதில் பல்வேறு மாற்றங்களை செய்ததால், அந்த பிசினஸும் முடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பணமும் போய் சேரவில்லை. இதனையடுத்து, வாடிக்கையாளர்கள் இந்த பிசினஸில் இருந்து வெளியேற கேட்டபோது, “முன்னர் கூறியது போல முழுத்தொகையும் கிடைக்காது” என சுந்தர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், பலமுறை செல்போன் மூலமாகவும் நேரடியாகவும் சென்று அணுகிய போது சரியான விளக்கம் அளிக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நெக்ஸ்ட் ஜென் நிறுவனத்தில் முதலீடு செய்த கோவையை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத் தரும்படி, கோவை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தற்போது, இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.