
தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிவித்து வரும் கும்பல்களை மருத்துவத்துறை அதிகாரிகள் தேடிப் பிடித்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் வடக்கு புதூர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கும்பல் ஒன்று குடிசை தொழில் போல ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தது தெரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்து மருத்துவ இணை இயக்குநர் சாந்தி அதிரடி ஆய்வு ஈடுபட்டார். அப்பொழுது ஸ்கேன் மெஷின் உடன் கையும் களவுமாக மணிவண்ணன், பிரசாத் என்ற இருவர் சிக்கிக்கொண்டனர். அவர்களிடம் 'உங்களுக்கெல்லாம் பெண் குழந்தை பிறக்கவில்லையா? உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என கேள்வி எழுப்பினார் சாந்தி. அதற்கு 'இரண்டு பாப்பா இருக்கிறது' என்றனர்.
''பெண் குழந்தை வைத்திருக்கும் நீங்களே இந்த மாதிரி தவறு செய்யலாமா? முதலில் நீங்க திருந்துங்க. ஊருக்குள்ள ஒரு குழந்தை பெண் குழந்தை கூட பிறக்கவிட மாட்டீங்களாடா. சேலம் ஆத்தூரில். இதே வேலைதான் உங்களுக்கு'' என எச்சரித்தார். சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ஸ்கேன் செய்யும் மிஷின் மற்றும் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் எத்தனை பேர் ஸ்கேன் செய்து கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்த அறிந்து சென்றனர் என்பது தொடர்பாக சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.