
திருச்செந்தூரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய முயன்ற பொழுது தவறி விழுந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்செந்தூர் நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை உள்ள பகுதிகளில் அடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சீரமைப்பு பணியில் ஈடுபட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பின்புறம் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியே வருவதாக தகவல் கிடைத்தது.
அதையறிந்து ஒப்பந்த தூய்மை பணியாளர் மணி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் அங்கு சென்றுள்ளனர். கழிவு நீர் உறிஞ்சும் வாகன மூலம் சாக்கடையை அகற்ற முயன்று கொண்டிருந்த பொழுது பணியாளர் மணி பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் திருச்செந்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த மீட்புப் படையினர் மணியின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதில் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலானது திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்த தூய்மை பணியாளர் பாதாள சாக்கடையில் விழுந்து விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.