
மதுபோதையில் வடமாநில இளைஞர் ஒருவர் கோவில் மீது ஏறி நின்றுகொண்டு அலப்பறை செய்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூரில் பரபரப்பான சாலை ஓரத்தில் இருந்த கோவில் மீது வடமாநில இளைஞர் ஒருவர் நிறைந்த மதுபோதையில் அலப்பறை கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் எவ்வளவோ முயன்றும் அந்த நபர் கீழே இறங்கவில்லை. கண்ணை ஒரு மாதிரி உருட்டி பார்த்துக் கொண்டு கைகளால் புரியாத சைகைகள் செய்து கொண்டிருந்தார். கீழே இறங்க போலீசார் அறிவுறுத்தினால் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்வது போல் பாசாங்கு செய்தார். கோவில் சுவரில் போடப்பட்டிருந்த சீரியல் லைட் வயரில் தலையை மாட்டி தூக்கிடுவது போல நடித்தார்.
போலீசார் சிறிது நேரம் என்ன செய்வது என்றே தெரியாமல் திணறிய நிலையில் எப்படியோ கீழே வந்த அந்த போதை ஆசாமியை ஓடிபிடித்து காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.