
நீண்ட ஆண்டுகளாவே விசாரணையில் இருந்து வரும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெ.வின் வளர்ப்பு மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் அவரின் மறைவிற்கு பிறகு கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கையிலெடுத்து விசாரித்து வருகின்றன.
சிபிசிஐடி, ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல்துறையினர் 250 க்கும் மேற்பட்டோரிடம் இந்த வழக்கில் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் என்பவருக்கு அண்மையில் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி கடந்த 11/03/2025 அன்று வீரபெருமாள் ஆஜராகி இருந்தார். அப்போதைய பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ், இந்த சம்பவத்தில் விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரான கனகராஜ்க்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவருடைய செல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்தும் ஆஜராகியுள்ள வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 27 ஆம் தேதி சிபிசிஐடி முன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கொடநாடு எஸ்டேட் முன்னாள் பங்குதாரர் என்ற அடிப்படையிலும், குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பிலும் சுதாகரனை விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டதாலும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.