Skip to main content

அரசு நிலத்தில் கைவைத்த மர்ம கும்பல்; இரவோடு இரவாகத் தூக்கப்பட்ட குற்றவாளிகள்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

police arrested the gang that occupied the government's land

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிக்கு அருகே உள்ள கோகுல் நகர்ப் பகுதி 16-ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலங்களை வாங்கி அதில் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற நிலத்தை, சிலர் போலியாக ஆவணங்கள் தயாரித்து சுமார் மூன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக, வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்கு புகார் வந்தது. அப்போது அவர் மேற்கொண்ட ஆய்வில், வீட்டு மனைகளில் மோசடி நடந்திருப்பது உண்மை எனத் தெரிய வந்தது. 

 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜா ரவி தங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, எஸ்ஐ மஞ்சுநாத் உள்ளிட்டோர் தீவிர விசாரணையில் இறங்கினர். 

 

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், 3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வீட்டு வசதி வாரிய நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில், ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலரான ஆராவமுது என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த முறைகேடு சம்பவத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 

 

மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மதி என்கிற மதியழகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓசூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், டேனியல், ஸ்ரீதர், முருகதாஸ், ஆனந்த் உட்பட மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 62 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில், முதலில் கைது செய்யப்பட்ட ஆராவமுது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்துள்ளார். இரண்டாவதாக கைது செய்யப்பட்ட மதி என்கிற மதியழகன் ஏற்கனவே ஈரோடு பகுதியில் ஈமு கோழி விற்பனை வழக்கில் கைதாகி 10 வருடம் சிறைத் தண்டனை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது. 

 

இதையடுத்து, அவர்கள் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி கிளைச் சிறைகளில் அடைத்தனர். தற்போது, இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், வீட்டுவசதி வாரிய நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் உதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.