
நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய மாணவர்களின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே நான்காம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. அன்றைய தினம் சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்தது. சில நீட் தேர்வு மையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேர்வை முறையாக எழுத முடியவில்லை என ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பதினாறு மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், 'மழைக்காலத்தில் ஏற்பட்ட மின்தடையால் தங்களால் நீட் தேர்வை முறையாக எழுத முடியவில்லை. மறு நீட் தேர்வு நடத்த வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று (06/06/2025) விசாரணைக்கு வந்த பொழுது 'மின்சாரம் துண்டிக்கப்பட்டதை குறித்து விசாரணை நடத்தியதில் நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். எனவே மறு நீட் தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை. நடத்தவும் முடியாது' என மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதனை வைத்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
வழக்கை விசாரித்த நீதிபதி குமரேசன் வழங்கிய தீர்ப்பில், மத்திய அரசு எடுத்துள்ள முடிவு நியாயமானது. 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள். எனவே மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.