Skip to main content

'பாரத் மாதா கி ஜெ'- பாஜக மேடையில் முழங்கிய சரத்குமார்

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
'Family monarch rule is happening in Tamil Nadu' - Sarathkumar speech

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் வந்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் அண்மையில் பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் சரத்குமார், ''57 ஆண்டுகள் தமிழகத்தில் இந்த திராவிட கட்சிகள் ஆட்சி செய்தன. அது என்ன திராவிடம் என்று புரியவில்லை. நான் ஒரு சில அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். திராவிடத்தை புரிந்து கொள்ளாமல் திராவிடம் திராவிடம் என்று சொல்லி ஒரு குடும்ப அரசியலும், மன்னர் ஆட்சியும் தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண தொண்டன், ஏழை எளிய தொண்டன் நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்று வருவதற்கு, ஒரு தலைவன் ஆவதற்கு, ஒரு பதவியில் அமர்வதற்கு வாய்ப்பு இல்லாத இடத்தில் கையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

பிரதமரை பற்றி நான் நெல்லையில் நடந்த கூட்டத்திலேயே சொன்னேன். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் இந்தியாவின் பெருமையை ஒரு தலைவன் எடுத்துச் சென்றிருக்கிறான் என்றால் அது பிரதமர் மோடி தான். அவருடைய வாழ்க்கை வரலாறு தெரியாதவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். ஒரு சிறந்த தலைவரை நாம் அடையாளம் காட்ட வேண்டும். ஒரு சிறந்த தலைவனுக்கு உழைப்பு இருக்க வேண்டும், உறுதி இருக்க வேண்டும், நியாயம் இருக்க வேண்டும், தர்மம் இருக்க வேண்டும், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்'' என்றார். தொடர்ந்து பேசிய அவர் பேச்சின் இறுதியில் ‘பாரத் மாதா கி ஜெ’ என மூன்று முறை முழங்கி தனது உரையை நிறைவு செய்தார்

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.