Skip to main content

பிரதமரை சந்திப்பதற்கு தேதி வாங்கி தருவதாக ஆளுநர் உறுதி: மு.க.ஸ்டாலின்

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
stalin


பிரதமரை சந்திப்பதற்கு தேதி வாங்கி தருவதாக எங்களிடம் ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மதியம் 12 -30 மணியளவில் சந்தித்து பேசினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
 

stalin


இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் மத்திய அரசு அதை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசின் போக்கால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. இது பற்றி நாங்கள் இன்று ஆளுனரிடம் தெளிவாக எடுத்து கூறினோம்.

மே மாதம் 3-ந்தேதிக்குள் காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதுவரை மத்திய அரசு காத்திருக்கக்கூடாது. அதற்கு முன்னதாக வரைவு திட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் சார்பில் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர் ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.
 

stalin


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதற்காக தமிழ்நாட்டில் இருந்து விவசாயி பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று முதலமைச்சரிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. இது தொடர்பாக எந்த கடிதமும் மத்திய அரசுக்கு வரவில்லை என்று பொன். ராதாகிருஷ்ணனே கூறி விட்டார்.

இதுநாள் வரை பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேச முடியவில்லை. எனவே பிரதமரை சந்திக்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆளுனரும் பிரதமரை சந்திப்பதற்கு தேதி வாங்கி தருவதாக எங்களிடம் உறுதி அளித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்