
காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான ராஜிவ்காந்தி படுகொலையில் இலங்கை தமிழர்கள், தமிழக தமிழர்கள் என பலர் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் நீதிமன்றத்தில் 7 பேரை தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் குறிப்பிடதக்கவர் முருகன். விடுதலைப்புலிகள் இயக்கத்தில், உளவுத்துறையில் பணியாற்றியவர் என வழக்கு தொடுத்தது இந்திய சிபிஐ. அதில் தூக்குதண்டனை கிடைத்து 28 வருட சிறையில் இருந்தபடி நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தில் இரண்டு ஆண்டுக்கு முன்பு அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு இப்போதும் சிறையிலேயே உள்ளனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச சிறை நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி பல கைதிகள் பேசி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகன், இலங்கை யாழ்பாணத்தில் உள்ள தனது தந்தை வெற்றிவேல், புற்றுநோய் தாக்கியுள்ளதால் உடலுக்கு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்றோ, நாளையோ இறக்கும் நிலையில் உள்ளார். அவருடன் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார்.
அதனை சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. அதனை தொடர்ந்து, தனது வழக்கறிஞர் புகழேந்தி மூலமாக, அரசுக்கு கடிதம் எழுதவைத்தார். முருகனின் தந்தை மிக மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளார். ஒரே ஒருமுறை வீடியோ காலில் தனது தந்தையின் முகத்தை பார்க்க அல்லது பேச முருகனை அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வேண்டுக்கோள் பரிசீலனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 26- ஆம் தேதி முருகனின் தந்தை வெற்றிவேல், யாழ்ப்பாணத்தில் மரணத்தை தழுவினார். இந்த தகவல் சிறையில் உள்ள முருகனுக்கு முறைப்படி அனுப்பியுள்ளனர். இது முருகனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைக் கேட்டு முருகன் கதறி அழுதுள்ளார். இந்த தகவல் முருகன் மனைவி நளினிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள நளினி, தனது மாமனார் இறந்ததை கேள்விப்பட்டு தனது அறையில் இருந்து வெளியே வராமல் அழுதுள்ளார்.
உயிருடன் இருந்தபோதுதான் அனுமதிக்கவில்லை. மறைந்த அவரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கவாவது அனுமதிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். தமிழ் உணர்வாளர்களும் அதே கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விடுத்துள்ளனர்.